"மைத்துனிக்கு வீடு! அண்ணனுக்கு 8 அடி பாதை".. கடிதத்தில் உயில்.. குமரியில் நகை மதிப்பீட்டாளர் தற்கொலை
கன்னியாகுமரி: புலியூர்குறிச்சியில் "இறுதி செலவுக்கு 64-ஆயிரம் ரூபாய் வைத்துள்ளேன்" என கடிதம் எழுதி வைத்து விட்டு வங்கி நகை மதிப்பீட்டாளர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், புலியூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (51). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார்.
ஊழலை எதிர்த்ததால் 7 முறை துப்பாக்கி சூடுக்கு ஆளானவர்.. தளரவில்லை.. யூபிஎஸ்சி தேர்வில் வென்ற அதிகாரி
இவர் தனது மனைவி ரோகிணி, மகள் அர்ச்சனாவுடன் புலியூர்குறிச்சியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வியாழக்கிழமையான இன்று காலை ரோகிணியின் அக்கா மேகலா அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
ஆள் அரவமில்லை
ஆனால் அவர் அழைப்பை ஏற்காத நிலையில் நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு ஆள் அரவமில்லாததால் சந்தேகமடைந்த மேகலா உடனடியாக தக்கலை போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் கதவை உடைத்தனர்.
ரமேஷ் கடிதம்
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது ரமேஷ் கடிதம் ஒன்றை எழுதி அதன் மேல் பணம் மற்றும் பைக் சாவியை வைத்து விட்டு தனது மனைவி மேகலாவுடன் வீட்டின் அறையில் மின் விசிறியில் சேலையில் தூக்கிட்டபடி சடலமாக காணப்பட்டார். அது போல் மற்றொரு அறையில் மகள் அர்ச்சனா விஷமருந்தி இறந்த நிலையில் காணப்பட்டார்.
விசாரணை
கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரமேஷின் மனைவி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், ரமேஷ் வேலைக்கு சென்று விடுவதால் மனைவியை சரிவர கவனிக்க முடியாத நிலை இருந்து வந்ததாக தெரிகிறது.
உதவிக்கு ஆள் இல்லை
மேலும் தனது வீட்டருகே வீடுகளில் அவரது அக்கா, அண்ணன் ஆகியோர் வசித்து வந்த நிலையிலும் யாருமே தனது மனைவிக்கு உதவி செய்வதாக இல்லை என்பதால் ரமேஷ் மன உளைச்சலில் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் ரமேஷ் எங்கள் மரணத்திற்கு யாரும் காரணமில்லை. வாழ விருப்பமில்லாமல் நாங்கள் மூவரும் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம்.
மனைவியின் அக்கா
நாங்கள் மூவரும் சென்ற பின் வீட்டை மனைவியின் அக்கா மேகலா முருகன் அவர்களுக்கு உரிமையாக்குகிறேன் என்று எழுதப்பட்டிருந்ததோடு அண்ணன் மகாத்மா என்ற காந்திக்கும் அக்கா கணவர் ஸ்ரீகுமாருக்கும் 8 அடி பாதையை ரெஜிஸ்டர் பண்ணி கொடுக்கவும் என்றும் இறுதி செலவுக்கு 64-ஆயிரம் ரூபாய் வைத்துள்ளதாகவும் எங்கள் மரணத்திற்கு பின் இந்த வீடும் இடமும் பைக்கும் மேகலா முருகனுக்கு உரிமையாக்குகிறேன் என்றும் கடிதம் எழுதி வைத்து விட்டு ரமேஷ் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
வழக்குப் பதிவு
இதனையடுத்து அண்ணன் மகாத்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புற்று நோயால் மனைவி அவதியுற்ற நிலையில் நகை மதிப்பீட்டாளர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.