உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு ஓவைசி மீதான தாக்குதல் உதாரணம்: அகிலேஷ் யாதவ்
லக்னோ: அசாதுதீன் ஓவைசி மீது தாக்குதல் நடந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக இருப்பதாக சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் 10ஆம் தேதி தொடங்கி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மார்ச் 10இல் அறிவிக்கப்பட உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஓவைசி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி உள்ளது. இது தவிரப் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் களத்தில் உள்ளன. இது தவிர உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகையும் கணிசமாக உள்ளது. இதனால், ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மொத்தம் 403 இடங்களைக் கொண்ட உபி சட்டசபைத் தேர்தலில் 100 இடங்களில் மஜ்லிஸ் கட்சி போட்டியிடுகிறது.

அசாதுதீன் ஓவைசி
இதற்காக அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி மீரட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, காரில் டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது சாஜர்சி சுங்கச்சாவடி அருகே கார் சென்றுகொண்டிருந்த போது, அவரின் வாகனத்தை மர்ம நபர்கள் சிலர் சுட்டுள்ளனர்.அதில் காரில் இரண்டு குண்டுகளின் பாய்ந்துள்ளது தெரிகிறது. மேலும், 3ஆவது குண்டு கார் டயரில் பாய்ந்ததில், டயர் பஞ்சரானது. இந்த விவகாரத்தில் ஒருவரை உபி போலீஸ் கைது செய்துள்ளது.

பாதுகாப்பு
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஓவைசியின் இந்து விரோத கருத்துக்களால் காயப்பட்டதன் காரணமாக அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அசாதுதீன் ஓவைசிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் z+ பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தனக்கு அந்த பாதுகாப்பு வேண்டாம் என ஓவைசி தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ்
ஓவைசி மீது தாக்குதல் நடந்திருக்கும் நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த நிகழ்வைக் கண்டித்துப் பேசியிருக்கிறார். ''இந்த நிகழ்வைக் கண்டிக்கிறேன். இது வருத்தமளிக்கிறது. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. வன்முறை நடந்திருந்தால், குற்றவாளிகள் யார், காரணம் என்ன எனபது தெரியவேண்டும். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் ஓடிவிட்டார்கள் என்றால், இந்தத் தாக்குதலை நடத்தியது யார். மேலும் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடாக இருப்பதற்கு ஆளும் பாஜக தான் காரணம்'' என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications