உ.பி.யில் மனசை பதற வைக்கும் பயங்கரம்.. ஹத்ராஸ் போல் தலித் இளைஞர் உடலை தீவைத்து எரித்த போலீஸ்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தலித் இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை போலீசாரே தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஃபரூக்காபாத்தை அடுத்த பிரமபுரி கிராமத்தை சேர்ந்தவர் கவுதம். திருமணமான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.
தாய், சகோதருடன் ஒன்றாக வசித்து வந்த இவரை கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1:30 மணியளவில் மிராபூர் போலீசார் வீடு புகுந்து பயங்கரமாக தாக்கி இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
ஷாக்! கைகளை கட்டி..மிருகங்களான 3 பேர்.! கதறிய தலித் சிறுமி பலி! உச்சகட்ட பரபரப்பில் உத்திர பிரதேசம்!
வீதியில் கிடந்த உடல்
வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், உள்ளே இருந்த பொருட்களை தூக்கி வீசி சென்றுள்ளனர். இந்த நிலையில் மறுநாள் கவுதமின் உடல் படுகாயங்களுடன் அவரது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் கிடைத்திருக்கிறது. இதனை கண்ட உறவினர்களும் கிராம மக்களும் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் கொடூரமாக தாக்கி கவுதமை கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டிய கிராம மக்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.
சகோதரர் தற்கொலை முயற்சி
சனிக்கிழமை கவுதமின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கவுதமின் சகோதர் உடால் கிராம மக்களுடன் சேர்ந்து, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை தன்னிடம் தர மறுத்தததால் காவல் நிலையத்திலேயே கவுதமின் சகோதரர் உடல் சிங் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
உடலை எரித்த போலீசார்
பிரேத பரிசோதனை நடைபெற்றபோது அங்கு வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதவரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனால் போலீசாரே, கவுதமின் தங்களின் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக எரித்து இறுதிச் சடங்கை நிறைவேற்றியதாக அவரது தாயார் குற்றம்சாட்டுகிறார்.
தலித் என்பதால் கொலை
ஆனால், இந்த குற்றச்சாட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அஜர் பிரதாப் சிங் மறுத்து இருக்கிறார். விசாரணை நடத்தி வருவதாகவும் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். கவுதமின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து உயிரிழந்த கவுதமின் மனைவி தெரிவிக்கையில், தலித் என்ற காரணத்தினாலேயே தனது கணவரை போலீசார் கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டுகிறார்.
4 இடங்களில் காயம்
பிரேத பரிசோதனை முடிவில் மரணத்துக்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. அதேநேரம் உடலில் தோல்பட்டை, முழங்கை, இடுப்பு உள்ளிட்ட 4 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. கவுதம் மீது திருட்டு, கள்ளச்சாராயம், கடத்தல் உள்ளிட்ட 4 வழக்குகள் இருப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார், கவுதமின் மரணத்துக்கான காரணத்தை தனது அறிக்கையில் தெரிவிக்கை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
போலீஸ் அராஜத்தால் ஊரை காலி செய்யும் மக்கள்
தலித்துகள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் போலீசார் அராஜகம் அதிகம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கவுதமை கைது செய்யும்போது அண்டை வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மிராபூர் போலீசாரின் தொடர் அராஜகம் காரணமாக என்ன செய்வதென்றே தெரியாமல் கிராம மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்று இருக்கின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸில் 19 வயது தலித் பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், அவரது உடலை போலீசாரே எரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதேபோன்றதொரு நிகழ்வு உபியில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.