மகாராஷ்டிராவில் நாளை மறுநாள் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் தேவேந்திர பட்னாவிஸ்?
மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரியை நாளை மறுநாள் சந்தித்து பாஜக ஆட்சி அமைக்க தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கோருவார் என்கின்றன மும்பை தகவல்கள்.
மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைக்க எந்த ஒரு கட்சியும் இதுவரை முன்வரவில்லை. பாஜகவும் சிவசேனாவும் ஆளுநர் பாகத்சிங் கோஷ்யாரியை தனித்தனியே சந்தித்தன.
ஆனாலும் இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க இதுவரை உரிமை கோரவில்லை. இந்நிலையில் தம்மை சந்தித்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான குழுவினரிடம் நவம்பர் 7-ந் தேதிவரை எந்த கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் ஆளுநர் கோஷ்யாரி.
ஏற்கனவே நவம்பர் 7-ந் தேதிக்குள் புதிய அரசு அமையாவிட்டால் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம் நவம்பர் 9-ந் தேதி முடிவடைகிறது.
புதிய அரசு.. டெல்லியை நோக்கி நகர்ந்த 'மகாராஷ்டிரா புயல்'- அதி தீவிரமடையுமா? வலுவிழக்குமா?
ஆகையால் நவம்பர் 10 அல்லது அதற்கு முன்னர் புதிய முதல்வர் கட்டாயம் பதவியேற்றாக வேண்டும். இல்லையெனில் ஜனாதிபதி ஆட்சி அமைவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடும்.
இந்நிலையில் டெல்லியில் முகாமிட்டுள்ள தேவேந்திர பட்னாவிஸ் இன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதனையடுத்து மும்பை திரும்பும் அவர் நாளை மறுநாள் ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார்.
பாஜகவின் 105 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில சுயேட்சைகளின் ஆதரவுடன் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்கு தேவை 146 எம்.எல்.ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.