மகாராஷ்டிராவில் நாளை தப்புமா உத்தவ் தாக்கரே அரசு? 46 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸால் ஆட்சி கவிழும்?
மும்பை: மகாராஷ்டிராவில் நாளை ஆளும் சிவசேனா கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆளும் கூட்டணி அரசுக்கான ஆதரவை 46 எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றிருப்பதால் முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி தப்புமா? என்பது பெரும் எதிர்பார்ப்பு.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு எதிராக சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். மொத்தம் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கு இருக்கிறது என்கிறார் ஏக்நாத் ஷிண்டே.
இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது; அதில் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது; உத்தவ் தாக்கரே அரசு தமது பெரும்பான்மையை நாளை மாலை 5 மணிக்குள் நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் மொத்தம் 288 எம்.எல்.ஏக்கள். சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே, கடந்த மாதம் காலமானதால் தற்போதைய நிலையில் மொத்த இடங்கள் 287. உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தேவை 144 எம்.எல்.ஏக்கள் ஆதரவு.
சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்குவதற்கு முன்பாக மகாராஷ்டிரா சட்டசபை பலம்:
- ஆளும் கூட்டணி: 152
- சிவசேனா- 55
- தேசியவாத காங்கிரஸ்- 53
- காங்கிரஸ் -44
- எதிர்க்கட்சியான பாஜக- 106
- இதர கட்சிகள், சுயேட்சைகள் 29
சிவசேனா எம்.எல்.ஏக்கள் 39, இதர கட்சிகள், சுயேட்சைகள் 7 பேர் என மொத்தம் 46 போர்க்கொடி தூக்கிய நிலையில்...
- ஆளும் கூட்டணி: 113
- சிவசேனா - 16
- தேசியவாத காங்கிரஸ்- 53
- காங்கிரஸ்- 44
போர்க்கொடி தூக்கிய 46 எம்.எல்.ஏக்கள், பாஜகவை ஆதரித்தால் பலம் என்ன?
- பாஜக+அதிருப்தி கோஷ்டி: 152
- பாஜக- 106
- அதிருப்தி (சிவசேனா, இதர கட்சிகள்-சுயேட்சைகள்) 46
- பெரும்பான்மைக்கு தேவை- 147
சிவசேனாவின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் பாஜகவை ஆதரிக்கும் நிலையில் கட்சித் தாவல் சட்டம் பாயாது; ஆகையால் 39 சிவசேனா எம்.எல்.ஏக்கள், பாஜகவை உறுதியாக ஆதரித்தால் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்து பாஜக தலைமையில் புதிய அரசு அமையும் என கூறப்படுகிறது.