முதல்வராவேன் என ஒருபோதும் கனவு கண்டது இல்லை.. எல்லோருக்கும் நன்றி.. உருக்கமாக பேசிய உத்தவ்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராவேன் என ஒருபோதும் கனவு கண்டது இல்லை, எல்லோருக்கும் நன்றி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசி உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். இன்று மதியம் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து இன்று அவர் ஆளுநர் பகத் சிங்கை சந்தித்து உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். மும்பையில் நடைபெற்ற மூன்று கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் உத்தவ் தாக்கரே ஒருமனதாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
உத்தவ் தாக்கரே பேசினார்
இந்த நிலையில் மூன்று கட்சி தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முன்னிலையில் உத்தவ் தாக்கரே பேசினார். அதில், ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து தேசத்துக்கு புதிய பாதையை காட்டியுள்ளோம். மாநிலத்தின் முதல்வராவேன் என ஒருபோதும் கனவு கண்டது இல்லை. சோனியா காந்திக்கும் மற்றவர்களுக்கும் நன்றி.
என்ன தொண்டர்கள்
சிவசேனா தொண்டர்களுக்கு மிக்க நன்றி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மிக்க நன்றி. முக்கியமான நேரத்தில் ஒற்றுமை காத்த எம்எல்ஏக்களுக்கு நன்றி. நான் எதற்கும் அஞ்சவும் இல்லை, பொய்கள் என்பது இந்துத்துவாவின் அங்கம் அல்ல.
கேள்விகள் எழுப்பினார்
தேவேந்திர பட்னாவிஸ் எழுப்பிய அத்தனை கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க தயார். பாஜக மக்களை ஏமாற்றிவிட்டது. நான் மட்டுமல்ல நீங்கள் அனைவருமே இம்மாநிலத்தின் முதல்வர்கள்தான்; இன்றைய நிகழ்வுதான் உண்மையான ஜனநாயகம்.
தனி ஆள் இல்லை
நான் இங்கு தனியாக முதல்வராகவில்லை. நீங்கள் எல்லோரும் ஒரு வகையில் முதல்வர்தான். உங்கள் எல்லோருக்கும் இந்த ஆட்சியில் அதிகாரம் இருக்கிறது. சத்ரபதி சிவாஜி கனவு கண்ட மகாராஷ்டிராவை நாம் உருவாக்குவோம், என்று உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.