கன்னியாகுமரியை சேர்ந்த 11 மாத குழந்தை.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 11 மாத குழந்தை ஒன்று தனது அசாத்திய திறமையால் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை புரிந்துள்ளது.
அசாத்திய திறமைகள், பிரம்மிக்க வைக்கும் செய்கைகள், சாகசங்கள் என தனித்துவமான செயல்பாடுகளை சர்வதேச அளவில் அங்கீகரிக்கும் வகையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் அளிக்கப்படுகிறது.
கடந்த 1955- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் கின்னஸ் புத்தகம் வெளியானது. அப்போது முதல் உலகில் நிகழ்த்தப்படும் சாதனைகள் பலவும் இந்த புத்தகத்தில் ஆவணப்படுத்தப்படுகிறது.
ஜான் சீனா கின்னஸ் சாதனை.. உடல்நலம் பாதித்த 650 குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி அசத்தல்!
கின்னஸ் சாதனை புத்தகம்
சாதனைகளை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் தங்களின் பெயரும் இடம் பிடிக்க வேண்டும் என்பது பலருடைய விருப்பமாக இருக்கிறது. தங்கள் திறமைகளை உலக அளவில் அங்கீகரிக்கப்படும் என்பதால், இந்த கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது பலருக்கும் பெரும் கனவு என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்தியாவில் ஏராளமான சாதனையாளர்கள் தங்கள் திறமையை காட்டி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து வருகின்றனர்.
11 மாத குழந்தை..
இந்த கின்னஸ் புத்தகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 11 மாத குழந்தையும் இடம்பிடித்துள்ளது. பலரும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில் 11 மாத குழந்தை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த குழந்தை வீட்டில் வைக்கப்பட்டுள்ள 233 பொருட்களை சரியாக அடையாளம் காட்டியதற்காக வழங்கப்பட்டுள்ளது.
233 பொருட்களை சரியாக
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு தேனாம்பாறை பகுதியை சேர்ந்த பெறில் ஹெர்மன் பியான்ஷா தம்பதியின் 11 மாத குழந்தை அற்றி ஹெர்மன் தான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அந்த குழந்தை வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் பெயரை பெற்றோர்கள் கூற கூற 233 பொருட்களை சரியாக அடையாளம் கண்டு எடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பெற்றோரே பயிற்சி
அந்த வீடியோவில் குழந்தையின் தாய், வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு பொருளின் பெயரை சொல்ல.. சொல்ல.. அந்த குழந்தை பொருளை அடையாளம் கண்டு சொல்கிறது. சிறு வயதிலேயே இந்த குழந்தையின் அபூர்வ நினைவாற்றலுக்கு குழந்தையின் பேற்றோரின் பயிற்சியே காரணமாம். குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே இந்த குழந்தைக்கு அதிக நினைவாற்றல் இருப்பதை தெரிந்துகொண்ட குழந்தையின் பெற்றோர் இது தொடர்பாக குழந்தைக்கு பயிற்சி அளித்து வந்துள்ளனர்.
நாடுகளின் கொடிகளை கண்டுபிடிக்க
இதன் மூலம் இந்த குழந்தையின் பெயர் வேல்டு ரெக்கார்ட் புக் ஆப் லண்டன், கலாம் வேல்டு ரெக்காட்ஸ், மேஜிக் புக்காப் ரெக்கார்ட்ஸ் என பல சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. இதையடுத்து அந்த குழந்தைக்கும், குழந்தையின் பெற்றோருக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், அந்த குழந்தைக்கு 195 நாடுகளின் கொடிகளை காண்பித்து அதனை அடையாளம் காணும் பயிற்சி அளிக்கப்பட்டு வருதாக பெற்றோர் தெரிவித்தனர்.