"சாரி, இனியும் ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்க முடியாது!" ஆஸ்திரேலியா பல்டி! ஏன் முக்கியம்
சிட்னி: ஆஸ்திரேலிய அரசு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜெருசலேம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் இப்போது பல்டி அடித்து உள்ளது.
சர்வதேச அளவில் பல ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சினைகளில் ஒன்றாக ஜெருசலேம் விவகாரம் உள்ளது. பல்வேறு நாடுகளும் இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிட மறுத்தே வருகிறது.
ஐநா சபையும் இந்த பிரச்சினையைத் தீர்க்க எடுத்த நடவடிக்கைகள் இதுவரை பயன் தரவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியா இதில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துவது உலக முஸ்லிம்களையே இழிவுபடுத்துவதாகும் - ஆஸ்திரேலிய இமாம்கள் சபை
என்ன பிரச்சினை
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாகப் பிரச்சினை இருந்து வருகிறது. ஆறு நாள் போர் என்று அழைக்கப்படும் 1967ஆம் ஆண்டு நடந்த சண்டையின் முடிவில் ஜெருசலேத்தை கைப்பற்றினர். இதனை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக இஸ்ரேல் அறிவித்தது. இருப்பினும், பெரும்பாலான சர்வதேச நாடுகள் இதை ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் உலக நாடுகள் பெரும்பாலும் அமைதி காத்தே வருகிறது.
டிரம்ப்
ஏனென்றால் வரும் காலத்தில் உருவாக இருக்கும் பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் இருக்கும் என்று கூறி வருகின்றனர். இதனால் பல ஆண்டுகளாகவே இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. உலகில் இப்போது பெரும்பாலான நாடுகளின் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை ஏற்கவில்லை. இதனிடையே அமெரிக்கா கடந்த 2018இல் டிரம்ப் அதிபராக இருந்த போது ஜெருசலேத்தை தலைநகராக ஏற்பதாக அறிவித்தது.
ஆஸ்திரேலியா
அதைத் தொடர்ந்து ஸ்காட் மாரிசன் தலைமையிலான ஆஸ்திரேலியா அரசும் ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதாக அறிவித்தது. இதனிடையே இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்தோணி அல்பானீஸின் தொழிலாளர் கட்சி அங்கு வென்று ஆட்சியைப் பிடித்தது. இந்தச் சூழலில் இப்போது ஜெர்சலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா இப்போது மீண்டும் அறிவித்து உள்ளது.
அங்கீகரிக்க முடியாது
இது தொடர்பாக ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் கூறுகையில், "இஸ்ரேல் பாலஸ்தீன் இடையேயான பிரச்சினை சமாதான பேச்சுவார்த்தை மூலமே தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர தன்னிச்சையான முடிவுகளால் இல்லை. இந்த தீர்வை சீர்குலைக்கும் வகையிலான எந்தவொரு முடிவையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.. ஆஸ்திரேலியா எப்போதும் போல டெல் அவிவ் நகரில் தான் இருக்கும்" என்றார்.
ஏன் முக்கியம்
டெல் அவிவ் நகரம் என்பது இஸ்ரேல் நாட்டின் நகரமாகும். ஜெர்சலேத்தை தலைநகராக அறிவிக்கும் முன்பு டெல் அவிவே இஸ்ரேல் தலைநகராக இருந்தது. ஜெர்சலேத்தை இஸ்ரேல் தலைநகராக ஏற்பதாக ஆஸ்திரேலியா அறிவித்த போது அது உள்நாட்டிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், இந்தோனேசியா போன்ற நாடுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவைத் தவிர ஆஸ்திரேலியா மட்டுமே ஜெர்சலேத்தை தலைநகராக அறிவித்த நிலையில், இப்போது அதுவும் தனது முடிவைத் திரும்பப் பெற்று உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நிலைப்பாடு
இது தொடர்பாக பென்னி வாங் மேலும் கூறுகையில், "முந்தைய அரசு எடுத்த முடிவு ஆஸ்திரேலியா சமூகத்தில் மோதலையும் துயரத்தையும் ஏற்படுத்தியது. இன்று இருக்கும் அரசு அதைத் தீர்க்க முயல்கிறது. கடந்த காலத்தில் இடைத்தேர்தலில் வெல்ல வேண்டும் என்று மாரிசன் அரசு அப்படியொரு தவறான முடிவை எடுத்தது. அதேநேரம் இதற்காக நாங்கள் இஸ்ரேலை எதிர்க்கிறோம் என்று இல்லை. அவர்களை முதலில் ஆதரித்ததே ஆஸ்திரேலியா தான். நாங்கள் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இரண்டையும் ஒரே போலப் பார்க்கிறோம். இதைப் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும்" என்றார்.