நெல்லையில் டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க முட்டி மோதும் அதிமுகவினர்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 229 டாஸ்மாக் பார்களுக்கான ஏல டெண்டர் விடப்பட்டது. அதை எடுக்க அதிமுகவினர் முட்டி மோதுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட டாஸ்மாக் பார்களுக்கான ஏலம் கடந்த 30 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவை ஒட்டி பொது விடுமுறை விடப்பட்டதால் ஏலம் விடும் தேதி மாற்றப்பட்டது. நெல்லை மாநகரத்தில் 52 டாஸ்மாக் பார்களும், மாவட்டத்தில் 177 பார்களும் ஏலம் விடப்பட்டது.
நெல்லை அருகே முன்னீர்ப் பல்லத்தில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நடந்த இந்த ஏலத்திற்காக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு டெண்டருக்கு வந்தவர்கள் மற்றும் டெண்டர் பெட்டிகளும் கண்காணிக்கப்பட்டன.
டெண்டர் விண்ணப்பங்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் ஏலம் எடுக்க வந்தவர்கள் விண்ணப்பங்களை நிரப்பி உரிய பெட்டிகளில் போட்டனர். விண்ணப்பத்துடன் டிடிக்கான ரூபாய் 525, நகராட்சி, மாநகராட்சி் எனில் ரூ.25 ஆயிரத்திற்கான பிணை வைப்புத் தொகை, கிராம பஞ்சாயத்து எனில் ரூ.5 ஆயிரம் பிணை வைப்பு தொகை ஆகியவற்றையும் இணைத்திருந்தனர். பிற்பகல் டெண்டர் திறக்கப்பட்டு பரிசீலனை நடந்தது. பார் ஏலம் விடும் பணிகள் மற்றும் மனுக்கள் பரிசீலனையை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவசங்கரன், உதவி மேலாளர் ராஜசேகர், கிடங்கு மேலாளர் செலின் கலைசெல்வி ஆகியோர் தலைமையில் நடந்தது.
நெல்லை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர் உரிமம் நேற்றோடு முடிவடைந்தது. இதன் காரணமாக இன்று தற்காலிக உரிமம் வழங்கப்படுகிறது. டெண்டர் எடுத்தவர்கள் பார்களுக்கான முழு தொகையையும் செலுத்தியவுடன் உரிமம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். செங்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அதிகபட்சம் ரூ.1.85 லட்சம் தொகை வரை டெண்டர் நிர்யணயிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அனைத்து பார்களையும் ஆளும் கட்சியினரே டெண்டர் எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.