விவசாயிகளை முதலில் காப்பாற்றுங்கள்.. பின்னர் மாடுகளை காப்பாற்றலாம்.. அய்யாக்கண்ணு காட்டம்
மத்திய அரசு முதலில் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயி அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
மதுரை: மத்திய அரசு முதலில் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், பின்னர் விவசாயிகளே மாடுகளை காப்பாற்றிக் கொள்வார்கள் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ள மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இனிமேல், சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும். இறைச்சி தேவைக்காக யாரும் பசு, ஒட்டகம், காளை, எருமை மாடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாது என்று கூறியுள்ளது.
மத்திய அரசின் திடீர் உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயங்களை காப்பாற்ற மறுக்கும் மத்திய அரசு மாடுகளை காப்பாற்ற முயற்சி செய்து வருகிறது என்று கூறினார்.
மேலும் நதிகளை இணைக்க கோரி ஜூலை மாதம் ஆயிரம் விவசாயிகளை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் கூறினார். விவசாயிகளுக்கே உணவு இல்லை என்கிற போது மாடுகளை எப்படி காப்பாற்ற முடியும் எனவும் கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசு முதலில் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், பின்னர் விவசாயிகளே மாடுகளை காப்பாற்றிக் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.