போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்குவோம்.. கையெழுத்து இயக்கம் தொடங்கினார் ஓ.பி.எஸ்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று கோரி ஒரு கையெழுத்து இயக்கத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடு போயஸ் கார்டன் வீடு. அவரது தாயார் காலத்தில் வாங்கப்பட்ட வீடு. இங்குதான் ஜெயலலிதாவின் அரசியல் சகாப்தம் தொடங்கி முடிந்தது. ஆனால் இந்த வீட்டை தற்போது சசிகலா குடும்பத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.அங்கிருந்து வெளியேறாமல் உள்ளனர். ஜெயலலிதாவின் உறவினர்களிடம் வீட்டை ஒப்படைக்கவில்லை.
குறைந்தபட்சம் இந்த வீட்டை யாருக்கு எழுதி வைத்துள்ளார் ஜெயலலிதா என்பதைக் கூட அவர்கள் முறையாக தெரிவிக்காமல் உள்ளனர். இந்த நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சமீபத்தில் கூறுகையில் போயஸ் தோட்ட வீடு எங்களது அம்மா குடியிருந்த கோவில். அந்த வீட்டை நினைவிடமாக்குவோம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இதுதொடர்பாக ஒரு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். அதில் தனது கையெழுத்தை முதலில் பதிவு செய்து தொடங்கி வைத்தார். இந்த கையெழுத்துக்களுடன் கூடிய மனுவை ஆளுநரிடம் சமர்ப்பித்து போயஸ் தோட்ட வீட்டை நினைவிடமாக்க கோரிக்கை விடுக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.