அப்பாவின் தோல்வி... சோகத்தில் ஏற்காடு திமுக வேட்பாளரின் 19 வயது மகன் நெஞ்சுவலியால் மரணம்
ஏற்காடு: சட்டசபைத் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியுற்ற திமுக வேட்பாளரின் 19 வயது மகன் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் தமிழ்ச்செல்வன் (46). சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு, பிரியா (20), வேல்முருகன் (19) என இரண்டு குழந்தைகள். இவர்களில் வேல்முருகன், சேலம் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார்.
தமிழ்ச்செல்வன் கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், 2011 மற்றும் 2016 சட்டசபைத் தேர்தல்களில் மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிட்டார். ஆனால், இந்த இரண்டு தேர்தல்களிலும் அவருக்கு தோல்வியே கிடைத்தது.
தமிழ்ச்செல்வனின் தேர்தல் பணி மற்றும் செலவு கணக்குகளை அவரது மகன் வேல்முருகனே பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், தனது தந்தையின் தோல்வியை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
இதனால், சோகமான மனநிலையில் இருந்த வேல்முருகனுக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேல்முருகனின் இந்த திடீர் மரணத்தால் புழுதிக்குட்டை கிராம மக்களும், ஏற்காடு திமுகவினரும் சோகம் அடைந்துள்ளனர்.