டிடிவி தினகரன் கட்சி பெயரில் ஏன் திராவிடம் இல்லை.. சி.ஆர்.சரஸ்வதி சொன்ன 'அசத்தல்' விளக்கம்
Recommended Video
சென்னை: 'அம்மா' என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த பிறகு திராவிட சொல்லுக்கு தேவையில்லை என்று டிடிவி தினகரன் அணியை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனி கட்சியை சமீபத்தில் ஆரம்பித்தார் டிடிவி தினகரன். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள வசதியாக இதுபோன்ற தனி கட்சியை அவர் துவங்கியதாக கூறப்பட்டது.
இருப்பினும் திராவிடம் மற்றும் அண்ணா ஆகியோர் பெயர்கள் அந்த கட்சியில் குறிப்பிடப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
நாஞ்சில் சம்பத் விலகல்
இந்த நிலையில், தினகரனின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்த நாஞ்சில் சம்பத், தினகரன் அணியில் இருந்து விலகியுள்ளார். அண்ணா, திராவிடம் ஆகிய பெயர்கள் கட்சியில் இல்லை என்பதுதான், தான் விலக காரணம் என கூறியுள்ளார். இனி இலக்கிய கூட்டங்களில் மட்டும் பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சி.ஆர்.சரஸ்வதி பேட்டி
இதுகுறித்து சி.ஆர்.சரஸ்வதி அளித்த பேட்டியொன்றில் கூறியதாவது: நாஞ்சில் சம்பத் ஏன் அதிருப்தியடைந்தார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இதற்கு முன்பு ஜெயலலிதா இருந்தபோது அவர் எடுத்த முடிவுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களா? தலைமை எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு உடன்பட்டுதான் போக வேண்டும்.
சமூக நீதி காத்த வீராங்கணை
2014ல் தனியாக தேர்தலில் போட்டியிடுவதாக கூறிய ஜெயலலிதா சாதித்து காட்டினார். எனவேதான் நாங்கள் ஜெயலலிதா எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு எதிர்த்து பேசுவதேயில்லை. ஜெயலலிதா ஒரு திராவிட தலைவி. ஜெயலலிதா சமூக நீதி காத்த வீராங்கணை என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியால் பெயர் பெற்றவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா பெயர் போதும்
ஜெயலலிதா ஒரு திராவிட தலைவியாக வாழ்ந்தவர் என்பதால் திராவிடர் என்ற சொல்லை கட்சியில் சேர்க்க தேவை எழவில்லை. அம்மா என்ற சொல்லே திராவிடத்தையும் குறிக்கும். அவர் மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் என்பதால், அம்மா என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளோம். அதிமுக என பெயரில் திராவிடம் மற்றும் அண்ணாவை வைத்துக்கொண்டு மதவாத சக்திகளுக்கு அடிமையாக இருக்கிறார்களே. அது சரியா? இவ்வாறு சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.