நரி, சிங்கம், மாமா, மச்சான்.. டமால்!
சென்னை: தேமுதிக போராடி பெற்ற சேலத்தில் கூட விஜயகாந்தின் மச்சான் சுதீப் வெற்றி பெற முடியாமல் போனது தேமுதிகவின் வரலாற்று சோகம். மச்சானும், மாமாவும் பாசப்பிணைப்பால் செய்த தவறுதான் இத்தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
அனுபவம் இல்லாத சுதீஷ்
சினிமா தயாரிப்பாளராக இருந்த சுதீஷை மச்சான் என்கிற காரணத்துக்காக மட்டும், தேமுதிகவில் இணைத்துக்கொண்டு அவருக்கு மாநில இளைஞரணி செயலாளர் பதவியை அளித்தார் விஜயகாந்த். எந்த அரசியல் அனுபவமும் இல்லாத சுதீஷ் விஜயகாந்த் உறவினர் என்ற ஒரே தகுதியில் கட்சிக்குள் கம்பீரமாக வலம் வந்தார்.
வளவளா..
விஜயகாந்த்தாவது பொதுக்கூட்டங்களில் மக்கள் பிரச்னைகளை சாட்டையடியாக எடுத்துவைப்பார். ஆனால் பேச்சில் தொடர்ச்சியோ, புரியும் வகையிலோ இருக்காது. சுதீஷ் கூர்மையாக பேசும் ஆற்றல் இல்லாதவர். உளுந்தூர்பேட்டையில் கூட்டணி குறித்து தீர்மானிக்க போடப்பட்ட மாநாட்டில், சுதீஷ் பேச்சை கேட்டவர்கள், இவருக்கு மாமா எவ்வளவோ மேல் என கமண்ட் அடித்தனர்.
ராமதாசின் கோபம்
ஆனால் பாமகவோ தனித்து போட்டியிட உள்ளதாக கூறிவிட்டு, தனது இளைஞரணி துணைச் செயலாளர் ரா.அருளை சேலம் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. அவரும் பல நாட்களாக பட்டிதொட்டியெல்லாம் பிரச்சாரம் செய்து வந்தார். விஜயகாந்த்தின் பிடிவாதத்தால் சேலம் தொகுதியை தேமுதிகவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை பாஜக தலைமைக்கு ஏற்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த பாமக நிறுவனர் ராமதாஸ், நரிகளிடம் சிங்கங்கள் பிச்சை கேட்காது என்று தருமபுரியில் எச்சரித்தார். இருப்பினும் அன்புமணி தலையீட்டால் சேலம் தேமுதிக வசமானது.
பாமகவினர் விரக்தி
ஆனால் அருள் தனக்கு கிடைத்த தொகுதி கைவிட்டுப்போனதால் ரொம்பவே விரக்தியும், கோபமும் அடைந்திருந்தார். அவரது ஆதரவாளர்கள் சுதீஷுக்கு வாக்களிப்பதை தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. இதைத்தான் தேர்தலுக்கு முந்தைய அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறின. அதேபோல சுதீஷ் படுதோல்வியடைந்துள்ளார். அருளுக்கு கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று அவரது ஆதரவாளர்கள் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.
குட்டு வாங்கிய விஜயகாந்த்
சேலம் தொகுதியில் விஜயகாந்த் காட்டிய பிடிவாதத்தால்தான் ராமதாஸ் கூட்டணியை விட்டு விலகியே நின்றதாக கூறப்படுகிறது. வடமாவட்டங்களில் செல்வாக்குள்ள பாமகவின் ஆதரவை முழுமையாக பெற சுதீஷ் விஷயம் ஒரு தடையாகிவிட்டது. மச்சானுக்கு சீட் கேட்டுப்போய், மாமா தலையில் குட்டு வாங்கியதுதான் மிச்சம்.
இதில் நான் மத்திய அமைச்சராவேன் என்று சொல்லி சுதீஷ் ஓட்டு கேட்டது தான் ஹைலைட்!