நாகையில் சுழன்றடிக்கும் மழை... புதுவை, காரைக்காலிலும் கொட்டித் தீர்க்கிறது வானம்! #tamilnadurains
நாகை, திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது.
நாகப்பட்டினம் : சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை நீடித்து வருகிறது. நாகை மாவட்டத்தில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தமிழகத்தில் வெளிக்காட்டத் தொடங்கியுள்ளது வானிலை. பருவமழை தொடங்கி 3 நாட்களே ஆன நிலையில் இன்று காலை முதலே மழை ஒரு காட்டு காட்டி வருகிறது. மழையால் சில சிரமங்கள் ஏற்பட்டாலும் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி, நீர்நிலைகள் வறண்டு போகாமல் இருக்க மழை அவசியமானதே.
எனினும் மழைக்காலங்களில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை. சென்னையில் வெளுத்து வாங்கும் மழையை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதே போன்று மாவட்ட நிர்வாகங்களும் இந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
|
விவசாயிகள் மகிழ்ச்சி
காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வறட்சியின் பிடியில் சிக்கி இருக்கும் விவசாயிகள் மனமகிழ்ச்சியடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்திலும் காலை முதலே மழை சுழன்றடித்து வருகிறது.
கொள்ளிடத்தில் 9 செ.மீ மழை
சென்னை வானிலை மையத்தின் இன்று காலை நிலவரப்படி நாகப்பட்டினம் கொள்ளிடம் அணைக்கரன்சத்திரத்தில் 9 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இதே போன்று நாகை மாவட்டம் சீர்காழியில் 6 சென்டிமீட்டர் மழையும், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
வானை மூடிய மழை மேகங்கள்
காரைக்காலில் காலை முதல் விடாமல் கொட்டித் தீர்க்கும் மழைக் காட்சிகளை நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மழை மேகங்கள் வானை மூடியுள்ளதால் பிற்பகல் கூட அதிகாலைப் போல காட்சியளிக்கிறது.
பள்ளிகள் விடுமுறையா?
இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்ட நிலையில் நாளை இந்த 9 மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.