தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்... தெலங்கானாவில் சகோதரத்துவம்!
தெலுங்கானாவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பக்தரை, அர்ச்சகர் தோளில் சுமந்து கோயில் கருவறைக்குள் அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
ஹைதராபாத்: மாற்றத்திற்கான முதல்படி இதுவென நெகிழ்ந்துள்ளார் 25 வயது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பக்தர் ஒருவர். ஹைதராபாத்தின் ஸ்ரீரங்கநாத கோயிலுக்கு தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரை கோயில் அர்ச்சகர் சுமந்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக அரங்கேறி வரும் நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த கோயில் அர்ச்சகர் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரை தனது தோளில் சுமந்து கொண்டு கோயிலுக்குள் அழைத்து சென்றுள்ள சம்பவம் அனைவரையும் உற்றுநோக்கச் செய்துள்ளது.
ஹைதராபாத் நகரில், ஜியாகுடா என்ற இடத்தில், புகழ்பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர்,60 வயது சிஎஸ் ரங்கராஜன். தெலுங்கானா மாநில கோயில் பாதுகாப்பு கமிட்டித் தலைவர் மற்றும் ஆன்மிக பேச்சாளராக இவர் உள்ளார்.
ஆன்மிக சொற்பொழிவாளர் ரங்கராஜன்
தெலுங்கு, தமிழ்மொழிகளில், பல கோயில்களில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்துபவர். இவர் தாழ்த்தப்பட்ட மக்களும் ஆன்மிக பணியில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கை உடையவர். இதன் ஒரு முயற்சியாக அர்ச்சகர் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரை கோயில் கருவறைக்குள் தன்னுடைய தோளில் சுமந்து கொண்டு அழைத்து சென்றுள்ளார்.
அனைவரும் சமம்
2,700 ஆண்டுகள் பழமையான வழக்கத்தை புதுப்புக்கும் முயற்சி தான் இது. சானதானா தர்மாவின் உயர் நோக்கத்தை மீண்டும் பரப்பும் விதமாகவே இதனை தான் செய்தேன். சமூகத்தில் அனைவரும் சமமே என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்றும் ரங்கராஜன் கூறியுள்ளார்.
தோளில் சுமந்து கொண்டு ஊர்வலம்
இளைஞர் ஆதித்யா பாராஸ்ரீயை தனது தோளில் அமர வைத்த ரங்கராஜன், மாலை மரியாதையுடன் ஊர்வலமாக கோயில் கருவறைக்குள் அவரை தூக்கிச் சென்றார். ஆதித்யாவுக்கு முண்டாசு கட்டி கழுத்தில் மாலையும் சூடப்பட்டிருந்தது.
மாற்றத்திற்கான விதை என நம்பிக்கை
அர்ச்சகர் தோளில் சுமந்து கோயில் கருவறைக்குள் அழைத்து சென்ற நிகழ்வு மாற்றத்திற்கான படி என்று இளைஞர் ஆதித்யா கூறியுள்ளார். என்னுடைய சொந்த ஊரான மெக்பூப் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இறைவழிபாட்டிற்காக சென்ற போது எங்கள் குடும்பத்தினர் அவமானப்படுத்தப்பட்டு, வெளியேற்றப்பட்டோம். இந்நிலையில் இன்றைய நிகழ்வானது மாற்றத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த இளைஞர் கூறியுள்ளார்.