சட்டவிரோத சாராய விற்பனையை வீடியோ எடுத்தவரின் மண்டை உடைப்பு... 5 பேர் கைது
சட்டவிரோதமாக சாராய விற்பனையை வீடியோ எடுத்தவரின் மண்டை உடைக்கப்பட்டதை தொடர்ந்து சாராய வியாபாரி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
விழுப்புரம்: சட்டவிரோதமாக சாராய விற்பனை நடப்பதை படம் பிடித்த 2 பேர் மீது சாராய வியாபாரிகள் தாக்குதல் நடத்திய வழக்கில் பிரபல சாராய வியாபாரி உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே ரெட்டனை சங்கராபரணி ஆற்று மேட்டுப் பகுதியில் சாராயம் விற்பனை நடந்து வந்தது. இதை அதே கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் மற்றும் சுகுமார் ஆகிய 2 இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
இதனைக் கண்ட சாராய வியாபாரிகள், அந்த இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில், சுதாகர் மற்றும் சுகுமார் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இருவரும் சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதனிடையே அவர்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவியது.
இதையடுத்து, பெரியத்தச்சூர் உதவி காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையிலான போலீஸ், அந்த வீடியோவை வைத்து, பிரபல சாராய வியாபாரி திண்டிவனம், தீர்த்தக்குளத்தைச் சேர்ந்த மரூர், ராஜா,சந்தோஷ், வீரமுத்து உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.