ராமேஸ்வரத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய இன்ஸ்பெக்டர் அதிரடி ”சஸ்பெண்ட்”!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த நபருக்கு உதவிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் தனபாலன் என்பவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் மீது ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக பல்வேறு வழக்குகள் தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாக இருந்த இவரை கியூ பிரிவு போலீசார் தேடிவந்தனர். கடந்த வாரம் ராமநாதபுரம் கேணிக்கரை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் கஞ்சா கடத்தி வந்த செல்வக்குமார் போலீசாரிடம் சிக்கினார். அவரை கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவரது செல்போனை ஆய்வு செய்ததில், மண்டபம் இன்ஸ்பெக்டர் தனபாலன் எண் பதிவாகியிருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் தொடர்ந்து செல்வக்குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில், இன்ஸ்பெக்டர் தனபாலன் கியூ பிரிவினரின் தேடுதல் நடவடிக்கைகள் உட்பட போலீஸ்துறை தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் செல்வக்குமார், அவரது கும்பலுக்கு தெரிவித்தது தெரியவந்தது.
மேலும் இதற்காக செல்வக்குமாரிடம் மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையை தனபால் மாமூலாக பெற்று வந்ததும் ெதரிந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தனபாலன் மீது நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி மணிவண்ணன், மதுரை டி.ஐ.ஜி ஆனந்த்குமார் சோமானிக்கு பரிந்துரைத்தார். இதனை ஏற்று அவர், அதிரடியாக தனபாலனை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.