மதுபாட்டில் கடத்தல் வழக்கில் கைது: டாஸ்மாக் பார் உரிமையாளர் மரணம்
சென்னை: சென்னையில் டாஸ்மாக் விடுமுறை நாளன்று கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பார் உரிமையாளர் மரணமடைந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை மடிப்பாக்கம் கீழ்க்கட்டளையைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (42). இவர் அப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்றில் ‘பார்' நடத்தி வருகிறார்.
லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான கடந்த 16-ந்தேதி அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய நாளில் 500-க்கும் மேற்பட்ட குவாட்டர் மதுபாட்டில்களுடன் கோபாலகிருஷ்ணன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மடிப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று ஆட்டோவை மடக்கினர். மது பாட்டில்களை திருட்டுத் தனமாக பதுக்கி எடுத்துச் சென்ற குற்றத்துக்காக கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவருடன் கடை ஊழியர் மற்றும் ஆட்டோ டிரைவரும் சிக்கினார்கள். 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணி அளவில் கோபாலகிருஷ்ணனுக்கு திடீரென உடல்நல கோளாறு ஏற்பட்டது. கை கால் நடுக்கம் மற்றும் நெஞ்சுவலியால் அவர் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சிறைத்துறை அதிகாரிகள் கோபாலகிருஷ்ணனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு 9 மணிக்கு கோபால கிருஷ்ணன் உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். கோபாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக எங்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.
மேலும் கோபாலகிருஷ்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவரது மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். நேற்று இரவில் ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கோபாலகிருஷ்ணனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.