தேனி விவசாயிகள் கொண்டாடும் பென்னிகுக் பொங்கல்
தேனி: முல்லைப்பெரியாறு அணை கட்டி ஐந்து மாவட்ட மக்களின் தாகம் தீர்த்த, விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிய ஆங்கிலேயர் பென்னிகுக் பிறந்தநாளன்று பொங்கல் வைத்து நன்றி தெரிவிக்கின்றனர் தேனி மாவட்ட விவசாயிகள்.
சாதி, மதம் கடந்து ஒட்டுமொத்த தமிழர்களும் உணர்வுபூர்வமாக கொண்டாடும் திருநாள், பொங்கல் பண்டிகை. சூரிய கடவுளுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் இத்திருநாளை சில பகுதிகளில் வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள்.
தேனி மாவட்டத்தில் பெரும்பாலான வீட்டு பூஜையறைகளில் அவர்களின் மூதாதையர் படங்கள் இருக்கிறதோ இல்லையோ, பென்னி குக் புகைப்படம் கட்டாயம் இருக்கும்.
கடவுளாக வழிபாடு
தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர்தான் இந்த பென்னி குக். தங்கள் வாழ்வை செழிக்கச் செய்த பென்னி குக்கை கடவுளாகக் கருதி வழிபடுகின்றனர்.
தலைச்சான் பிள்ளைகளுக்கு
தங்களுக்கு பிறக்கும் தலைச்சன் பிள்ளைகளுக்கு பென்னிகுக் பெயரை வைக்கும் கிராமங்களும் தேனி மாவட்டத்தில் உண்டு. பாலார்பட்டி கிராமத்தில் நின்று ‘பென்னி குக்' என்று கூப்பிட்டால் குறைந்தது 20 பேராவது திரும்பி பார்ப்பார்களாம்.
பென்னி குக் பொங்கல்
பென்னி குக் பிறந்த நாளான ஜனவரி 15ஆம் தேதி இருப்பதால், பாலார்பட்டி கிராம மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக பொங்கலை பென்னி குக் பொங்கலாகவே கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு தை திருநாளும், பென்னி குக் பிறந்தநாளும் ஒரே நாளில் வருவதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஊரே பொங்கல் வைத்து
ஊருக்கு மத்தியில் இருக்கிற பென்னி குக் கலையரங்கம் முன்பாக நிலத்தை அகழ்ந்து நீண்ட அடுப்பு வெட்டி ஊரே சேர்ந்து பொங்கல் வைக்கிறது. கலையரங்கின் முகப்பில் பிரமாண்டமான பென்னி குக் புகைப்படம் அலங்கரித்து வைக்கப்படுகிறது.
படையல் போட்டு வழிபாடு
பொங்கலிட்டு முடிந்ததும் பானைக்கு ஒரு அகப்பை பொங்கல் எடுத்து, பென்னி குக்கிற்கு படையல் போடப்படும். பின் பென்னி குக் படத்தைச் சுமந்த வாறு ஊர்வலம் தொடங்கும். வாண வேடிக்கை, மேளதாளம் முழங்க, ஊரைச் சுற்றி வந்ததும், விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகும். மாட்டு வண்டி பந்தயம், சேவல் சண்டை, சிலம்பம் உள்பட பல்வேறு வீர விளையாட்டுகள் நடக்கும்.
நன்றிக்கடன்
பாலார்பட்டியில் தொடங்கிய பென்னி குக் பொங்கல், இன்று தேனி மாவட்டம் முழுவதும் வியாபித்திருக்கிறது. அவர் இல்லைன்னா இன்னைக்கு தேனி மாவட்டமே வரைபடத்தில் இருந்திருக்காது. பாதி அணை கட்டி முடிச்சப்போ, ‘இனிமே பணம் தர முடியாது'ன்னு வெள்ளைக்கார அரசாங்கம் சொன்னபோது, தன் சொந்தப் பணத்தை செலவு பண்ணி கட்டி முடிச்சவரு. அவர் போட்ட விதைதான் இன்னைக்கு எங்களுக்கு ஆகாரம். அவருக்கு தலைமுறை தலைமுறையா நாங்க நன்றிக்கடன் பட்டிருக்கோம்...என்கின்றனர் விவசாயிகள்.