பாரபட்சமாக நடந்து கொள்கின்றன.. அமெரிக்க ஊடகங்களை சாடிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த இந்திய வம்சாவளியினர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க ஊடகங்கள் பாரபட்சமாக நடந்து கொள்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனது அமெரிக்க பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.
ரஷ்யா- உக்ரைன் யுத்த விவகாரத்தில் அமைதியின் பக்கம் இந்தியா: ஐநாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
அமெரிக்க நாளிதழ்
அந்த வகையில், வாஷிங்டனில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வாஷிங்டன் போஸ்ட் உள்பட அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக சாடினார். இது குறித்து ஜெய்சங்கர் கூறுகையில், ''இங்குள்ள சில ஊடகங்களை நான் பார்க்கிறேன். இந்த நகரத்தில் இருந்து கொண்டு என்ன எழுதுகின்றனர் என்று உங்களுக்கும் தெரியும்.
பாரபட்சம் உள்ளது
எனது கருத்து என்னவெனில், பாரபட்சம் உள்ளது. அதேநேரத்தில், இதை தீர்ப்பதற்கான முயற்சிகளும் நடைபெறுகிறது. இந்தியாவின் பாதுகாவலர்கள் என்றும் இந்தியாவை வடிவமைப்பவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தங்கள் மதிப்பினை இந்தியாவில் இழந்து இருக்கின்றனர். இதனால், இந்தியாவிற்கு வெளியே இத்தகைய விவாதங்களை உருவாக்கிறார்கள்'' என்றார்.
பாரபட்சமாக செய்திகள்
அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் அமேசான் நிறுவனருமான ஜெப் பேசாஸ் -க்கு சொந்தமானதாகும். வாஷிங்டன் டிசி நகரில் இருந்து வெளியாகும் இந்த நாளிதழ் உலக அளவில் பெயர் பெற்றது. இந்த நிலையில், வாஷிங்டன் போஸ்ட் உள்பட அமெரிக்க முன்னணி ஊடகங்கள், இந்தியாவை பற்றி பாரபட்சமாக செய்திகள் வெளியிடுவதாக ஜெய்சங்கர் பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்கா பதில் கூற வேண்டும்
அதேபோல், பாகிஸ்தானுக்கு போர் விமான தளவாடங்களை அமெரிக்கா வழங்கியதை விமர்சித்தும் பேசினார். இது தொடர்பாக ஜெய்சங்கர் கூறியதாவது:- இதற்கு அமெரிக்கா உண்மையில் பதில் கூற வேண்டும். போர் விமானங்களுங்கான உதிரி பாகங்களை வழங்கியதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைத்தது என்பது பற்றி அமெரிக்கா விளக்க வேண்டும். இவை அனைத்தும் பயங்கரவாத ஒழிப்பு செயல் என்று ஒரு சிலர் கூறலாம். ஆனால், இந்த போர் விமானங்களின் உதிரி மற்றும் தளவாட பொருட்களை வாங்கியவர்கள் அதை எங்கே குவிக்கின்றனர் அதன் பயன்பாடு என்ன என்று அனைவருக்கும் நன்றாக தெரியும்'' என்றார்.
கடும் அதிருப்தி
பாகிஸ்தானுக்கு சில வாரங்களுக்கு முன்புதான் சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்பில் எப் -16 ரக போர் விமான தளவாடங்களை வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் பாகிஸ்தானுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் போர் விமான தளவாடங்களை அமெரிக்கா அளிக்க முடிவு செய்து இருப்பது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.