"வேலைவாய்ப்பின்மை, வெறுப்பு வாதம், வன்முறை..!" பாஜகவை குறி வைத்த ராகுல் காந்தி! ஆவேச பேச்சு
திருவனந்தபுரம்: கேரளாவில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பாஜகவை மிகக் கடுமையாகச் சாடி பேசினார்.
பாஜகவுக்கு எதிராக மக்களைத் திரட்டும் வகையில் ராகுல் காந்தி நாடு முழுவதும் பாத யாத்திரை செல்கிறார். கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த யாத்திரை காஷ்மீரில் நிறைவடைகிறது.
ஒற்றுமை யாத்திரை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரையைக் கடந்த புதன்கிழமை முதல்வர் ஸ்டாலின் குமரியில் தொடங்கி வைத்தார்.
நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி..6 மாவட்டங்களில் 100% பேர் தேர்ச்சி
ராகுல் காந்தி
அதன் பின்னர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, 5ஆம் நாளில் கேரளாவுக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவில் ராகுல் காந்தி மொத்தம் 19 நாட்கள் பாதயாத்திரை செல்ல உள்ளார். ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணம் தொண்டர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் என்று காங்கிரஸ் கட்சி பெரிதும் நம்புகிறது.
கேரளா
கேரளாவில் உற்சாகமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, நேற்று திருவனந்தபுரத்தில், "இந்த ஒற்றுமை யாத்திரை எதற்காகத் தேவை என்று சிலர் கேட்டுள்ளனர். இந்தியாவிற்குப் பல முக்கியமான இலக்குகள் உள்ளன. லட்சக்கணக்கான ஏழைகளின் துன்பத்தை நாம் குறைக்க வேண்டும். அது ஈஸியான காரியம் இல்லை. இந்தியா பிளவுபட்டு, ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொண்டு இருந்தால் இது நடக்காது.
இந்தியர் தான்
இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு நபரும் இந்தியர் தான். ஒருவர் மற்றொரு இந்தியரை வெறுக்கிறார் என்றால் அவர் இந்தியா என்ற கருத்து உருவாக்கத்தையே வெறுக்கிறார். இன்று, ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட கோபம் மற்றும் வெறுப்பு சூழல் நாடு முழுவதும் உள்ளது. வெறுப்பு, வன்முறை, கோபத்தால் தேர்தலில் வெற்றி பெறலாம், ஆனால் அதை வைத்து நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது.
வெறுப்பு
அதை பாஜக நிரூபித்துள்ளது. வெறுப்பு, வன்முறை மூலம் வேலையில்லாத் திண்டாட்டத்தையோ, விலைவாசி உயர்வையோ தீர்க்க முடியாது. மக்களிடம் சென்று மக்கள் பிரச்சினைக்குச் செவி சாய்ப்பதே இந்த பாத யாத்திரையின் ஒரே நோக்கம். இந்தியாவுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அனைவரது கருத்துகளையும் நாம் கேட்க வேண்டும். அதைத் தான் இந்த யாத்திரை செய்கிறது.
அடுத்து வரும் நாட்கள்
ராகுல் காந்தி இந்த பாத யாத்திரையில் 150 நாட்களில் மொத்தம் 3500 கிமீ தூரம் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மொத்தம் 12 மாநிலங்கள் வழியாக அவர் செல்ல உள்ளார். இப்போது கேரளாவில் அடுத்த 18 நாட்களுக்குப் பாத யாத்திரை செல்லும் அவர், செப்டம்பர் 30இல் கர்நாடகா செல்கிறார். அங்கு சுமார் 21 நாட்களுக்கு ராகுல் காந்தி நடைப்பயணம் செல்ல உள்ளார். ஒவ்வொரு நாளும் சுமார் 25 கி.மீ. நடக்கும் வகையில் இந்த யாத்திரை திட்டமிடப்பட்டு உள்ளது.