முஸ்லிம்கள் குறித்து சர்ச்சை பேச்சு... பிசி ஜார்ஜ்க்கு மத்திய அமைச்சர் ஆதரவு
திருவனந்தபுரம்: கேரளாவில் முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கேரளாவின் மூத்த அரசியல்வாதி பிசி ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். இவருக்கு மத்திய இணையமைச்சர் முரளீதரன் மற்றும் பாஜக தலைலவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.
இவர் கேரளா காங்கிரஸ், கேரளா காங்கிரஸ் (ஜோசப்), கேரளா காங்கிரஸ் (மணி), மதசார்பற்ற கேரளா காங்கிரஸ் கட்சிகளில் செயல்பட்டு வந்தார். 7 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். தற்போது கேரளா ஜனபாக்சம்(மதசார்பற்றது) கட்சியை துவங்கி தலைவராக உள்ளார். இவர் கோட்டயம் மாவட்டம் எரட்டுபேட்டா பகுதியில் வசித்து வருகிறார்.
மலட்டுத்தன்மை.. முஸ்லீம் கடையில் டீ சாப்பிட்டாதீங்க! கேரள காங் மூத்த தலைவர் பிசி ஜார்ஜ் பகீர்.. கைது
சர்ச்சை பேச்சு
இந்நிலையில் பிசி ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் நடந்த அனந்தபுரி ஹிந்து மகா சம்மேளனம் எனும் மாநாட்டில் பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛மாநிலத்தில் முஸ்லிம்கள் நடத்தும் உணவகங்களில் விற்கப்படும் டீ உள்ளிட்ட பானங்களில் எச்சில் துப்பப்படுகிறது. மேலும் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் மருந்து கலக்கப்படுகிறது. இதன்மூலம் இந்துக்களின் எண்ணிக்கையை குறைத்து நாட்டை கைப்பற்றலாம் என நம்புகின்றனர். இதனால் அவர்களின் உணவகங்கள், டீக்கடைகளை தவிர்க்க வேண்டும்.'' என்றார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கைது
இதையடுத்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த கோட்டை போலீசார் பிசி ஜார்ஜை இன்று காலை அவரது வீட்டில் கைது செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 153 ஏ (இருபிரிவினர் இடையே பகைமையை ஊக்குவித்தல்) பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிசி ஜார்ஜூக்கு எதிராக பல்வேறு தரப்பினர் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அமைச்சர் எதிர்ப்பு
இந்நிலையில் தான் பிசி ஜார்ஜ் கைதுக்கு மத்திய இணை அமைச்சர் (வெளிவிவகாரம்) முரளீதரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி முரளீதரன் கூறுகையில், ‛‛கேரளாவில் அப்பாவிகளை கொலை செய்யும் நபர்களை கைது செய்யாமல் பினராயி விஜயன் அரசு விட்டுவிடுகிறது. அவர்கள் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். மாநிலத்தில் சிலர் மோசமாக பேசுகின்றனர். அவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தற்போது முன்னாள் எம்எல்ஏ பிசி ஜார்ஜ் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பினராயி விஜயன் அரசு இரட்டை நிலைப்பாட்டுடன் பாசாங்குடன் செயல்படுகிறது. இது கண்டனத்துக்குரியது'' என்றார்.
பிசி ஜார்ஜ்க்கு ஆதரவு
மேலும் மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், முன்னாள் மாநில தலைவர் குமணன் ராஜசேகரன் ஆகியோரும் பிசி ஜார்ஜ் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் பிசி ஜார்ஜ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‛‛மாநிலத்தில் பொது இடங்களில் சர்ச்சையாக பேசும் நபர்கள் கைது செய்யப்படாமல் உள்ளனர். ஆனால் பிசி ஜார்ஜ் இந்துக்களுக்கான கூட்டத்தில் பேசியதால் தான் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு தலைபட்சமானது'' என தெரிவித்துள்ளனர்.
ஜாமீனில் விடுதலை
இதற்கிடையே பிசி ஜார்ஜ்க்கு இன்று மதியம் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து அவர் வெளியே வந்தார். அவருக்கு எதிராக கேரளாவில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகிறது.