2021-ல் இந்தியாவை குலைநடுங்க வைத்த லக்கிம்பூர், நாகாலாந்து படுகொலைகள்!
டெல்லி: 2021-ம் ஆண்டில் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி எடுத்தவைதான் உ.பி. மாநிலம் லக்கிம்பூர் மற்றும் நாகாலாந்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள். இந்த படுகொலைகளின் ரணம் நீண்டகாலம் ஆறாததாகவே இருக்கும்.
மத்திய அரசு 3 விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பின் ஒரு அம்சமாக டெல்லி எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டு தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இப்போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, உ.பி, ராஜஸ்தான் விவசாயிகள் பங்கேற்றனர். பஞ்சாப் மாநில விவசாயிகள் வீட்டுக்கு ஒருவர் என பங்கேற்றனர்.
டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் 700 விவசாயிகள் மாண்டு போயினர். இந்த துயரத்தின் அதி உச்சமாகத்தான் உ.பி. மாநிலம் லக்கிம்பூர் படுகொலைகள் நிகழ்ந்தன. உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது லக்கிம்பூர் கெரி.
லக்கிம்பூர் பகுதியான மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் செல்வாக்கு உள்ள பகுதி. இப்பகுதியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு துணை முதல்வர் மவுரியா உள்ளிட்டோர் பங்கேற்க வருகை தந்தனர். விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அக்டோபர் 3-ந் தேதி அங்கு கறுப்புக் கொடி போராட்டம் அமைதிவழியில் நடத்தப்பட்டது. விவசாயிகள் கறுப்பு கொடிகளை ஏந்தியபடி அமைதியாக பேரணி நடத்தினர்.
அப்பேரணியில் சென்றவர்கள் மீது கார் ஒன்று அதிவேகமாக மோதி தூக்கி எறிந்தது. இப்படி தூக்கி எறியப்பட்டதுடன் கீழே விழுந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டன. இச்சம்பவத்தில் அதே இடத்தில் 4 விவசாயிகள் துடிதுடிக்க மரணித்தனர். இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் பதிலடி கொடுத்தனர். இம்மோதல்களில் மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர். இத்தகைய படுகொலையை நிகழ்த்தியது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா என தெரியவர நாடு கொந்தளித்தது. ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டாலும் தற்போது விசாரணை குழு அறிக்கையானது லக்கிம்பூர் படுகொலை திட்டமிட்ட சதி என விவரித்துள்ளது. இதனால் இப்போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலகியாக வேண்டும் என்கிற குரல் நாடு முழுவதும் வலுத்து வருகிறது.
நாகாலாந்து படுகொலைகள்
இதைவிட மிக கொடூரமான ஒரு படுகொலைச் சம்பவம் நாகாலாந்தில் நிகழ்ந்தது. நாகாலாந்தின் மோன் மாவட்டமான மியான்மர் எல்லையில் உள்ளது. இம்மாவட்டத்தில் டிசம்பர் 5-ந் தேதியன்று நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் வீடு திரும்ப காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த அஸ்ஸாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையினர் இந்த அப்பாவி தொழிலாளர்களை சரமாரியாக சுட்டனர். இதேபோல் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் மொத்தம் 14 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். 14 பேரையும் தனிநாடு கோருகிற தீவிரவாதிகள் என தவறுதலாக நினைத்து சுட்டுக் கொன்றுவிட்டதாக ராணுவம் கூறியது. ஆனால் பொதுமக்கள் கோபம் கட்டுக்கடாங்காமல் போக, ராணுவ வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ராணுவத்தினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ஜவான் ஒருவர் மரணம் அடைந்தார்.
திமுக ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு ஊழல் - எடப்பாடி பழனிசாமி புகார்
இப்படுகொலை சம்பவத்துக்கு ராணுவம் மன்னிப்பு கோரியது. நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் மக்களின் கோபம் தணியவில்லை. இப்படி ராணுவம் சட்டத்தை கையில் எடுக்க காரணமே, ஆயுத படையினருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம். ஆகையால் இந்த சட்டத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்கிற முழக்கம் வடகிழக்கு மாநிலங்களில் வலுத்து வருகிறது.