Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூரிய கிரகணம் - சூரியனை விழுங்கும் ராகு கேது கிரகங்கள் - புராண கதை

சூரியன், சந்திரனை நிழல் கிரகங்களான ராகு கேது விழுங்கும் நேரத்தில் கிரகணங்கள் ஏற்படுவதாக புராண கதைகளில் சொல்லப்பட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் ராகு கேது பாம்பு கிரகங்கள் ஆகும். இந்த கிரகங்கள் சூரியன், சந்திரனை விழுங்கும் நேரத்தில் கிரகணங்கள் ஏற்படுவதாக புராண கதைகளில் சொல்லப்பட்டுள்ளன. பிரம்மாவிடம் வரம்பெற்று கிரகண வேளையில் சூரிய சந்திரர்களை ராகுவும் கேதுவும் பழிவாங்குவதாக புராண கதைகள் சொல்லப்பட்டுள்ளன. ஏன் சூரியன் சந்திரனை ராகு கேது பழிவாங்க வேண்டும் என்பது பற்றியும் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் எப்பொழுதாவது சந்திரன் குறுக்கிடும்போது ஏற்படும் நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும். அதே போல், சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மேல் விழும்போது ஏற்படும் நிகழ்வு சந்திர கிரகணம். ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே இந்த நிகழ்வு ஏற்படும். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இன்றைய தினம் பிற்பகலில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.42 மணிக்குத் தொடங்கி மாலை 6.41 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Ring of fire Solar Eclipse 2021 : Surya Grahanam Purana Story

இந்து சமய புராணங்களின் படி, காஸ்யப முனிவர்-அதிதி தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் தேவலோக வாசிகளான இந்திரன், வாயு, அக்னி போன்ற தேவர்கள். அதேபோல் காஸ்யபர்-திதி தம்பதிக்கு பிறந்தவர்கள் இரண்யாட்சன், இரண்யகசிபு உள்ளிட்ட அசுரர்கள். இதனால் தான் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் என்றைக்குமே ஏழாம் பொருத்தமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

கிருதயுகம் நடைபெற்ற சமயத்தில், அமுதம் பருகினால் என்றைக்கும் இளமையாகவும், அதிக பலமும், மரணமே ஏற்படாமல், சுகபோகமாக வாழலாம் என்பதை அறிந்த இந்திரன் முதலான தேவர்கள், அந்த அமுதம் பாற்கடலின் அடியில் உள்ளதை அறிந்து, பாற்கடலில் வாசம் செய்யும் திருமாலை தஞ்சமடைந்தனர்.

பாற்கடலை கடைவதற்கு மந்தார மலையை மத்தாகவும், தான் சயனிக்கும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொடுத்து உதவினார். அவ்வுளவு பெரிய பாற்கடலை கடைவதற்கு தங்களால் முடியாது என்பதால், உதவிக்கு தன் சகோதரர்களான அசுரர்களையும் துணைக்கு அழைத்தனர்.

அவர்களும், தாங்கள் பாற்கடலை கடைவதற்கு உதவ தயார் என்றும், அதற்க பிரதிபலனாக, அமுதத்தில் சரிபாதி தங்களுக்கும் வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். தேவர்களும் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அசுரர்களின் உதவியோடு பாற்கடலை கடைந்தனர்.

பாற்கடலில் இருந்து மகாலட்சுமி, சந்திரன், தன்வந்திரி பகவான் என பலரும் வெளிப்பட்டனர். ஆலகால விஷம் வெளிப்பட அதை சிவன் தனது கழுத்தில் தாங்கிக் கொண்டார். இறுதியாக பாற்கடலில் இருந்து தேவர்கள் எதிர்பார்த்த அமுதம் வெளிப்பட்டது.

அமுதத்தை அசுரர்கள் பருகினால், அவர்களை சமாளிக்கவே முடியாது, ஏற்கனவே அவர்களால் ஏகப்பட்ட தொல்லைகளை அனுபவித்து வருகிறோம். இதில் அமுதத்தையும் உண்டால், தேவர்களான தங்களுக்கு தொல்லைகள் அதிகரிக்கும் என்று திருமாலிடம் கூறினர் தேவர்கள்.

திருமாலும், அசுரர்களுக்கு அமுதம் கிடைப்பதை தடுக்க நினைத்து மோகின் வடிவம் எடுத்தார். மோகினியின் அழகில் சொக்கிப்போன அசுரர்கள், மோகினியே அனைவருக்கும் அமுதத்தை பரிமாறட்டும் என்று கேட்டுக்கொள்ள, அதற்கு தேவர்களும் சம்மதித்தனர்.

அமுதத்தை யாருக்கு முதலில் பரிமாறுவது என்பதில் தகராறு ஏற்பட, அமுத கலசத்தின் மேல் பகுதியில் இருக்கும் தெளிவான அமுதத்தை தேவர்களும், அடிப்பகுதியில் இருக்கும் அமுதத்தை அசுரர்களும் எடுத்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

முதலில் தேவர்கள் இருந்த வரிசையில் அமுதத்தை மோகினி பரிமாறினாள். ஆனால் இதில் ஏதோ உள்குத்து இருக்குமோ என்று சந்தேகப்பட்ட சுவர்பானு என்ற அசுரன் மாறு வேடத்தில் தேவர்கள் இருந்த வரிசையில் உட்கார்ந்தான்.

இந்த விஷயம் மோகினி வடிவில் இருந்த திருமாலும் அறிவார். அது தெரிந்தே அமுதத்தை சுவர்பானுவுக்கு கொடுத்தார் மகாவிஷ்ணு. அமுதம் கிடைத்த வேகத்தை அதை சுவர்பானுவும் அவசர அவசரமாக பருகினார்.
இதை சூரியனும் சந்திரனும் பார்த்துவிட்டனர்.

சூரியனும் சந்திரனும், உடனடியாக இதை மோகினியிடம் சென்று உண்மையை சொல்லவே, எதுவுமே தெரியாதது போல மோகினி தன்னிடம் இருந்த அகப்பையால் ஸ்வர்பானுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதனால் ஸ்வர்பானுவின் தலையும் உடலும் துண்டாகி விழுந்தது. அமுதத்தை பருகியதால் சுவர்பானுவின் உயிர் போகாமல் தலையும் உடலும் தனித்தனியாக விழுந்து கிடந்தும் துடித்துக்கொண்டிருந்தது.

அசுரர்கள் ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி அவர்களுக்கு அமுதத்தை அளிக்காமல் முழுவதையும் தேவர்களுக்கு வழங்கிவிட்டார் மகாவிஷ்ணு. சுவர்பானுவால் தான் தங்களுக்கு அமுதம் கிடைக்காமல் போனது என்பதை அறிந்த அசுரர்கள் சுவர்பானுவை அசுர குலத்திலிருந்து, ஒதுக்கி வைத்துவிட்டனர். தலை வேறு உடல் வேறாக கிடந்த சுவர்பானு தனக்கு நல் வழி காட்டுமாறு மகாவிஷ்ணுவை வேண்டினான்.

திருமாலும் மனமிறங்கி, உடலோடு பாம்பின் தலையையும், தலையோடு பாம்பின் உடலையும் பொருத்தி இருவருக்கும் ராகு, கேது என்று பெயரிட்டார். இருவரையும் நவக்கிரக மண்டலத்தில் மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் நேர் எதிர் திசையில் சஞ்சரிக்கும் படி அருள் பாலித்தார். அன்று முதல் ராகுவும் கேதுவும் நவக்கிரக மண்டலத்தில் சஞ்சரித்து வருகின்றனர்.

ஆனாலும், தனக்கு ஏற்பட்ட கதிக்கு காரணம் சூரியனும் சந்திரனும் தான் என்பதை உணர்ந்து, அவர்கள் இருவரையும் பழிவாங்க வேண்டும் என்று விரும்பி பிரம்மனை நோக்கி பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்து வரம் பெற்றனர். அதன்படி, ஆண்டு தோறும், நான்கு முறை சூரிய சந்திரரின் நிழல் பூமியின் மேல் விழாமல் தடுக்கும் வரத்தை கொடுத்தார்.

இதனையடுத்தே அமாவாசை நாளில் சூரியனின் நிழலையும், பவுர்ணமி நாளில் சந்திரனின் நிழலையும் பூமியின் மேல் படாமல் தடுத்து வருகின்றனர். இதையே சூரிய கிரகணம் என்றும் சந்திர கிரகணம் என்றும் புராணங்கள் சொல்கின்றன.

சுவர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளும் தடைப்படுமோ என்று பயந்தனர் தேவர்கள். அசுரனிடமிருந்து சூரியனை விடுவிக்க, பரிகாரத்தில் ஈடுபட்டனர். இதில் இருள் விலகி, இளஞ்சிவப்பாகக் காட்சி தந்தான் சூரியன். கடைசியில், அவனது இயல்பான நிறமான வெண்மை பளிச்சிட்டது என்கிற தகவல் வேதத்தில் உண்டு,

கிரகணம் பிடித்த நிலையில், கருவட்டமாகக் காட்சி தருவான் சூரியன். கிரகணம் விடத் துவங்கியதும், சிவந்த கலந்த வெண்மையில் ஒளிர்வான். முழுவதும் விட்டதும், வெண்மை நிறத்தினனாகக் காட்சி தருவான். வேதத்தில், அந்த கிரகணத்தின் நிகழ்வு உள்ளது. ராகுவைப் பற்றிய தகவல் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

அமாவாசை நாளில் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரே நேர்கோட்டில் சந்திரன் வருவதால் சூரிய ஒளி பூமியின் மேல் விழாமல் தடுக்கப்படுவதால் ஏற்படுவதே சூரியகிரகணம் என்றும், பவுர்ணமி நாளில் சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் ஏற்படுவது சந்திர கிரகணம் என்று அறிவியில் பூர்வமான உண்மையாகும்.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இது கங்கண சூரியகிரகணம் ஆகும். நெருப்பு வளையம் போல் தோற்றமளிக்கும். ஜோதிட சாஸ்திரப்படி ராகு என்னும் பாம்பு சூரியனை விழுங்கும் நிகழ்வு என்பதால் இதற்கு ராகு கிரகஸ்த சூரியகிரகணம் என்று கூறப்படுகிறது. இன்று வானத்தில் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்வையிடலாம். இந்திய நேரப்படி பிற்பகல் 1.42 மணிக்குத் தொடங்கி மாலை 6.41 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றாலும் இணையதளங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்வதை பார்த்து ரசிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+