சகல பாபங்களையும் தீர்க்கும் வருத்தினி ஏகாதசி விரத மகிமை - செல்வம் பெருகும்
ஏகாதசியன்று பகல் உறக்கம், உணவு இவற்றை தவிர்த்து விரதம் இருப்பது புண்ணியம். இறைவனின் அருளோடு இந்த உலகில் வாழத்தேவையான பொருளும் கிட்டும்.
சென்னை: சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. அதிலும் ஏகாதசியுடன் கூடிவரும் சனிக்கிழமை என்றால் மிகவும் விசேஷம். இன்றைய தினம் சனிக்கிழமையுடன் கூடிய ஏகாதசி விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. இறைவனின் அருளோடு இந்த உலகில் வாழத்தேவையான பொருளும் கிட்டும். அப்படிப்பட்ட ஒரு விரதமே சனிக்கிழமையன்று வரக்கூடிய வருத்தினி ஏகாதசி விரதம்.
ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன. கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், உணவு இவற்றை தவிர்த்து விரதம் இருப்பது புண்ணியம்.

வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி வருத்தினி ஏகாதசியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். வருத்தினி ஏகாதசி விரதம் இருப்பது குருக்ஷேத்திரப் புண்ணிய பூமியில் சூரிய கிரகணத்தின்போது சொர்ணதானம் செய்வதற்கு இணையானது என்று பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார்.
சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துக்கூறியுள்ளார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று சிவபெருமான் பார்வதி தேவிக்கு எடுத்துக்கூறியுள்ளார்.
தினசரியும் மூன்று வேளை சாப்பிடுகிறோம். 4 வேளை ஸ்நாக்ஸ், டீ, காபி என அருந்துகின்றோம். மாதம் 2 நாள் அதுவும் ஏகாதசி நாளில் ஒருவேளை சாப்பிடாமல் இருந்து இறைவனை நினைப்பதன் மூலம் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும்.
வருத்தினி ஏகாதசி விரதத்தின் மகிமைகளை பகவான் கிருஷ்ணனே பார்த்தனுக்குச் சொல்வதுபோல ஏகாதசி புராணம் விவரிக்கிறது. அதில் கிருஷ்ணன், விரதங்களில் வருத்தினி ஏகாதசி விரதம் தனித்துவம் வாய்ந்தது. பொதுவாக ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதிகம். வருத்தினி ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு பாவங்கள் தீர்வதோடு சகல செல்வ வளங்களும் கிடைக்கும் என்று கூறியுள்ளார் பகவான் கிருஷ்ணர்.
இஷ்வாகு குலத்தில் பிறந்த தந்துமாரா என்னும் மன்னன் சிவபெருமானால் சபிக்கப் பெற்றான். அவன் பின்னாளில் தன் தவறை உணர்ந்து வருத்தினி ஏகாதசி விரதம் இருந்து வழிபட அவன் சாபம் நீங்கி நன்னிலை அடைந்தான் என்று கூறியுள்ளார்.
இந்த விரதம் துன்பப்படும் இல்லத்தரசிகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டிய விரதம். குடும்பத்தில் மாமனார் மாமியார் கொடுமை, கணவனால் தொடர்ந்து தொல்லைகளை அனுபவித்துவரும் பெண்கள் இந்த வருத்தினி ஏகாதசி அன்று விரதமிருந்தாலோ, பெருமாளை அன்றைய தினம் மனதால் நினைத்து வழிபட்டாலோ விரைவில் துன்பங்கள் தீர்ந்து நன்மைகள் கிடைக்கும் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
வருத்தினி ஏகாதசி விரதம் இருப்பது குருக்ஷேத்திரப் புண்ணிய பூமியில் சூரிய கிரகணத்தின்போது சொர்ண தானம் செய்வதற்கு இணையானது' என்கிறார்.
இதில் இரண்டு விஷயங்கள் சூட்சுமமாக உள்ளதாகப் பெரியவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒன்று குருக்ஷேத்திர புண்ணிய பூமி என்பது நம் போராட்ட வாழ்வைக் குறிப்பது. அதில் சூரிய கிரகணம் என்பது வாழ்வில் துயரங்கள் சூழும் நேரம் என்று கொள்ளலாம். அப்போது நாம் அளிக்கும் சொர்ண தானமே இந்த விரதமும் வழிபாடும். துன்பங்கள் சூழும்போது இறைவனை நினைப்பது என்பது மிகவும் பலன்தரும்.
தானங்களில் குதிரை தானத்தைவிட கஜ தானம் உயர்ந்தது. கஜ தானத்தைவிட பூமி தானம் உயர்ந்தது. பூமிதானத்தைவிட எள் தானம் உயர்ந்தது. எள் தானத்தைவிட சொர்ண தானம் உயர்ந்தது என்கிறார்கள். சொர்ண தானத்தையும்விட உயர்ந்த தானம் அன்னதானம். பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் மூவருக்கும் திருப்தி அளிக்கும் ஒரே தானம் அன்னதானம். அப்படிப்பட்ட அன்னதானத்தை மேற்கொள்வதற்கு இணையான பலனை வருத்தினி ஏகாதசி நமக்கு அருளும்.
ஏகாதசி அன்று சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்லது. உண்ணாவிரதம் இருக்க முடியாதவர்கள் இயலாதவர்கள் முழு வேகவைத்த உணவை சாப்பிடாமல் பால், பழங்கள், அவல் சாப்பிடலாம். மேலும், இந்த நாள் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஆழ்வார் பாசுரங்கள் பாராயணம் செய்யலாம். ஓம் நமோ நாராயணாயா என்று கூறி வணங்க துன்பங்கள் துயரங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும்












Click it and Unblock the Notifications