மும்பை தாக்குதல்-பொறுப்பேற்றது டெக்கன் முஜாஹிதீன்
மும்பை: மும்பையில் நடந்த தாக்குதலுக்கு டெக்கன் முஜாஹிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதுவரை வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தோ அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தியோ தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். இந் நிலையில் மும்பையில் இம்முறை தீவிரவாதிகள் புதிய முறையைக் கையாண்டுள்ளனர்.
கையெறி குண்டுகளை வீசி அந்தப் பகுதியையே நிலை குலைய வைத்துவிட்டு அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் ஹோட்டல்களில் புகுந்து பலரையும் பிணயக் கைதிகளாகப் பிடித்துள்ளனர்.
பெரும்பாலும் ஏகே-47 ரக துப்பாக்கிகளையே அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஜீன்ஸ், கருப்பு டி-சர்ட், வலது கையில் சிவப்புக் கயிறு, ஒரு பை என்ற கோலத்தில் இந்த தீவிரவாதிகள் வந்தனர்.
பைகளில் வைத்திருந்த கிரணைட்களை எடுத்து திடீரென வீசிவிட்டு, அடுத்ததாக துப்பாக்கிகளை வெளியில் எடுத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கைகளில் சிவப்புக் கயிறு இருப்பதால் இவர்கள் நக்ஸல்களோ என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால், தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என டெக்கன் முஜாஹிதீன் என்ற அமைப்பு செய்தி நிறுவனங்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியது.
இந்த இ-மெயில் ரஷ்யாவில் இருந்து வந்துள்ளது. லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர் தான் இதை அனுப்பியதாக இன்டலிஜென்ஸ் பீரோ கூறுகிறது.