தீவிரவாதத்தை ஒடுக்க மீண்டும் பொடா- ஜெ
சென்னை: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது. இந்தியாவின் அமைதியை குலைக்கும் செயல் இது. இதற்கு மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக பொடா சட்டத்தை மீண்டும் மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: மும்பையில் நடந்துள்ள தீவிரவாதிகளின் கொடிய, கோழைத்தனமான தாக்குதலை அனைவரும் மிகக் கடுமையாக கண்டிக்க வேண்டும்.
இந்த நெருக்கடியான நேரத்தில், அனைவரும் உறுதியுடனும், ஒற்றுமையுடனும் இருந்து, இப்படிப்பட்ட செயலுக்கு எதிராக போராட வேண்டும்.
தீவிரவாதத்தை ஒடுக்க உடனடியாக பொடாவைப் போன்ற மிகக் கடுமையான சட்டம் தேவை. தீவிரவாதத்தையும், தீவிரவாத அமைப்புகளையும் கட்டுப்படுத்த தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை.
அரபிக் கடல் வழியாக படகுகள் மூலம் தீவரவாதிகள் வந்ததாக கூறப்படுகிறது. தாஜ் மஹால் ஹோட்டலுக்கு எதிர்புறம் உள்ள கேட்வே ஆப் இந்தியாவுக்கு வந்திறங்கியுள்ளனர்.
அங்கிருந்து தெற்கு மும்பையின் பல பகுதிகளை அவர்கள் தங்களது சரமாரி துப்பாக்கிச் சூட்டால் நடுங்க வைத்துள்ளனர்.
இது உளவுத்துறையின் மிகப் பெரிய தோல்வியாக கருதப்பட வேண்டும். மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடியாக கருதப்பட வேண்டும்.
நாட்டின் பல மாநிலங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த பிறகும் கூட, மத்திய அரசு தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
தற்போது இந்தியாவின் எந்த மாநிலமும் பாதுகாப்புக்குரியதாக இல்லை என்பது தெளிவாகி விட்டது. தீவிரவாதிகளும், தீவிரவாத அமைப்புகளும் மிக சுதந்திரமாக நடமாடுகின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாத தொற்றுநோயை உடனடியாக வேரறுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இல்லாவிட்டால் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் தீவிரவாத நோயால் பாதிக்கப்பட்டு விடும்.
இந்த நிலை நீடித்தால் நம் நாட்டுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து போய் விடும். இந்தியா தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக மாறி விடும். இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
தீவிரவாத தடுப்புச் சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய அரசுக்கு குறிப்பு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாநிலமும் தீவிரவாத தடுப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்வதை மத்திய அரசு தடுக்கத் தேவையில்லை என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும், உளவுத்துறை, காவல்துறை ஆகியவையும் கடுமையான சட்டம் தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இந்த யோசனைகளையெல்லாம் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. தற்போதுள்ள சட்டங்களே போதுமானது என்று கூறிக் கொண்டிருக்கிறது.
இப்படிச் சொல்வதன் மூலம் அப்பாவி உயிர்களோடு விளையாடுவது மட்டுமல்லாமல், தீவிரவாதிகளுக்கும் மறைமுகமாக மத்திய அரசு உதவி வருகிறது.
மொத்தத்தில் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனைத்து வகையிலும் தோல்வி அடைந்து விட்டது என்று அவர் கூறியுள்ளார்.