பற்றி எரிகிறது காஷ்மீர்-3 நாட்களில் 15 பேர் பலி-தடுமாறும் உமர் பரூக்
கடந்த வெள்ளிக்கிழமை காஷ்மீரில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதுவரை அங்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். 15வது நபராக, பிஜ்பெஹரா என்ற இடத்தில் தாரிக் அகமது என்பவர் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சில் காயமடைந்து நேற்று இரவு உயிரிழந்தார். நேற்று மட்டும் 8 பேர் இறந்துள்ளனர்.
காஷ்மீரில் உள்ள பத்து மாவட்டங்களிலும் சட்டம் ஒழுங்கை காக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீரில் நிலைமை மோசமாகி வருவதைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டம் நேற்று இரவு நடந்தது.
மக்கள் அமைதி காக்க வேண்டும், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் உமர் பரூக் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நேற்று ஒரு காவல் நிலையத்தை ஒரு கும்பல் காஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து தகர்த்தது. அப்போது அப்பாவி மக்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். க்ரூ என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. காவல் நிலையத்தில் இருந்து ஆயுதங்களையும் அந்தக் கும்பல் பறித்துச் சென்றது. அவர்களை போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் அப்ரோசா என்ற பெண் உயிரிழந்தார்.
கலந்தர், கட்லபால், பர்சூ, பிரஸ்டபால், பாம்போர் ஆகிய பகுதிகளிலும் வன்முறை தலைவிரித்தாடுகிறது.
தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை மற்றும் கலவரத்தை அடக்க முடியாமல் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு தடுமாறி வருவதால், மத்திய அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.