ஆஃப்ர் லெட்டர் போதாது வேலை வேண்டும்: ஹெச்.சி.எல்.லை கண்டித்து என்ஜினியர்கள் உண்ணாவிரதம்

ஹெச்.சி.எல். நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டு பல்வேறு பொறியியல் கல்லூரிகளுக்கு சென்று தேர்வு நடத்தி மாணவர்களை தேர்ந்தெடுத்தது. இறுதியாண்டில் இருந்த அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.25 லட்சம் சம்பளம் என்று கூறி பணி நியமன கடிதத்தையும் அப்பொழுதே அளித்தது. அந்த மாணவ, மாணவியர் 2012ல் படித்து முடித்திவிட்ட பிறகு உறுதியளித்தபடி அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.
சுமார் ஓராண்டுக்கு மேல் ஆகியும் அவர்களுக்கு வேலை கொடுக்கப்படவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாணவர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஹெச்.சி.எல். நிறுவனத்தால் வேலை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படும் என்ஜினியர்களில் 50 பேர் பெங்களூரில் உள்ள சுதந்திர பூங்காவில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஓசூர், சென்னை, ஹைதராபாத், அஸ்ஸாம் மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளில் இருந்தும் வந்த என்ஜினியர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு முறையும் போராட முயலும் போது வேலை அளிப்பதாக ஹெச்.சி.எல். உறுதியளிக்கும். ஆனால் வாக்குறுதியை காப்பாற்றவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கூட வேலை அளிப்பதாக இமெயில் வந்தது. ஆனால் இம்முறையும் நம்பி ஏமாற விரும்பவில்லை அதனால் தான் போராட்டம் நடத்தினோம் என்றும் ஒரு என்ஜினியர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஹெச்.சி.எல். தலைவர் ஷிவ் நாடார் இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணுமானு ஹெச்.ஆர். மேனேஜர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அண்மையில் ஹெச்.சி.எல். ஹெச்.ஆர். தலைவர் பிரித்வி ஷெர்கில் வெளியிட்ட யூடியூப் போஸ்ட்டில் 2012ம் ஆண்டு பேட்ச் மாணவர்களில் 1,000 பேர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications