"விபூதியை" கையில் எடுத்த முஸ்லிம்கள்.. தர்கா முன்பு நெருப்பில் இறங்கிய இந்துக்கள்.. ஆஹா திருப்புவனம்
பள்ளிவாசல்களில் இந்துக்கள் இன்று மொகரம் பண்டிகையையொட்டி நேர்த்திக்கடன் செய்தார்கள்
திருப்புவனம்: திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல் முன் ஹிந்துக்கள் தீக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர்.
தமிழில் 12 மாதங்கள் குறிப்பிடப்படுவதை போல, இஸ்லாமிய ஆண்டு நாட்காட்டியின் முதல் மாதமாக மொஹரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும்.
ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியை பொறுத்து கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொகரம் மாதத்தின் பத்தாம் நாளை இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்...
'8 நம்பர் ஃபார்ச்சுனர்’சனி பகவான் ஆதிக்கம்! வெற்றி பாதையில் சீமான்! அடித்து சொல்லும் ’ஜெ’வின் நிழல்!
புனித மாதம்
முஹமது நபி (ஸல்) அவர்களும், தீர்க்கதரிசிகளும், மற்ற தூதர்களும் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. எனினும், ஷீஆ முஸ்லிம்கள் இதனைத் துக்கமான மாதம் என்கின்றனர்... அதேபோல கடவுளின் தூதராகக் கருதப்பட்ட முஹம்மது நபி, முஹர்ரம் மாதத்தை 'அல்லாஹ்வின் புனித மாதம்' என்று அழைத்தார் என்றும் கூறப்படுவதால், மொகரம் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.. இன்றைய தினம் மொகரம் பண்டிகை என்பதால், அதிகாலை நேரத்திலேயே பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன..
முதுவந்திடல்
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் புத்தாடை அணிந்தும், உணவுகள் சமைத்தும் அதை உறவினர்களுடன் பகிர்ந்து மக்கள் மொஹரம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனிடையே வழக்கம்போலவே இந்த முறையும் மொகரம் பண்டிகையால் திருப்புவனம் களைகட்டி உள்ளது.. அதிலும் இந்துக்கள் மிக சிறப்பாக மொகரம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.. இஸ்லாமிய பண்டிகையை இந்துக்கள் கொண்டாடி, பலரையும் திக்குமுக்காட செய்து விட்டனர்.. இப்படி செய்வதற்கு ஒரு வரலாறும் இங்கு உண்டு.. திருப்புவனம் அருகே முதுவந்திடல் என்ற கிராமம் உள்ளது..
ரம்ஜான்
ஆரம்பத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் இங்கு வசித்து வந்துள்ளார்கள்.. ஆனால் காலப்போக்கில் இந்த கிராமத்திலிருந்து முஸ்லீம் மக்கள் பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.. இப்போது கிராமத்தில் இந்துக்கள் மட்டுமே அதிகம் உள்ளனர். எனினும் பல வருடங்களுக்கு முன்பே, இந்துக்களும் முஸ்லிம்களும் இங்கு ஒற்றுமையாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ரம்ஜான், மொகரம், தீபாவளி என 2 மத பண்டிகைகளையும், முஸ்லிம்களும், இந்துக்களும் ஒன்றாகவே கொண்டாடி வந்திருக்கிறார்கள்.
நாச்சியார்
இந்த சமயத்தில்தான், அப்போது பாத்திமா நாச்சியார் என்ற பெண் ஒருவர் அங்கு சிறப்பாக வாழ்ந்து வந்துள்ளார்.. அந்த கிராமத்துப் பெண்ணை நினைவுகூரும் வகையில்தான் இங்கு 10 நாட்கள் விழா கொண்டாடுவது வழக்கம்... அவர் இறந்தபிறகு, முதுவன் திடல் கிராமத்தில் மையப்பகுதியில் தர்கா, பள்ளிவாசல் ஆகியவற்றை அமைத்து, பாத்திமா நாச்சியாரை, முஸ்லிம்கள் தெய்வமாக வழிபட்டு வருவதை ஒவ்வொரு மொகரம் அன்றும் கடைப்பிடிக்கிறார்கள்.
நேர்த்திக்கடன்
இந்த திருவிழாவின்போது திருமணம், குழந்தை வரம், நோய் தீர்த்தல் போன்றவற்றுக்காக நேர்த்திக்கடன் செலுத்துவதும், விவசாயம் செய்து அறுவடை செய்த பிறகு, பாத்திமா நாச்சியாருக்கு படையல் செய்வது இந்த கிராம மக்களிடம் உள்ள கூடுதல் வழக்கங்களாகும்... அதேபோல, நேர்த்திக்கடன் தீர்க்க நினைப்பவை நடப்பதாகவும் தீர்க்கமாக நம்புகின்றனராம் இந்த கிராம மக்கள். அதுமட்டுமல்ல, அறுவடையாகட்டும், திருமணம், தொழில் எதுவானாலும் சரி, பள்ளிவாசலில் வந்து அனுமதி கேட்டபிறகுதான் இந்துக்கள் அவைகளை தொடங்குவார்கள்..
விபூதி
அந்த வகையில், இன்றைய தினம், இந்துக்கள் தங்கள் நேர்த்திக் கடனை செய்தார்கள்.. பொதுவாக இஸ்லாமியர்கள் வேண்டுதல் முறைகள் கடுமையாக இருக்கும் என்பதால், இந்துக்களும் தங்களை வருத்தி கொண்டு தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினார்கள்.. இதற்காக பள்ளிவாசலில் காப்பு கட்டி ஆண்களும், பெண்களும் ஒரு வாரம் விரதம் இருந்து வருகிறார்கள்.. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் விறகு கட்டைகளை தானமாக வழங்குகின்றனர். இன்று, பள்ளி வாசல் முன்பாக, மிகப்பெரிய அளவில் குழி வெட்டி, அதிகாலையில் கண்மாயில் நீராடிய பின் ஆண்கள் வரிசையாக 3 முறை தீக்குழி இறங்குகின்றனர்...
திருநீறு
பெண்கள் முக்காடிட்டு உட்கார்ந்து கொள்ள, ஆண்கள் தலை மீது தீ கங்குகளை வாரி இறைக்கின்றனர்... இதன் மூலம் பெண்கள் தங்களை நோய் நொடி அண்டாது என்பது இவர்களின் நம்பிக்கை.. தீக்குழி இறங்கியவர்களுக்கு இஸ்லாமியர்கள் திருநீறு பூசி ஆசி வழங்கினர்.. இந்துக்கள் நேர்த்திக்கடன் செலுத்த, முஸ்லிம் மக்கள் விபூதி வழங்கி ஆசீர்வதிக்கும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.. இந்து - முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலகாலத்துக்கும் இறுக்கமாகவே பயணித்து வருவது நமக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.