முதியவர் மரணத்திற்கு சித்து காரணமா.. விரட்டும் 32 வருட பழைய வழக்கு.. உச்சநீதிமன்றம் கெடு!
டெல்லி: பஞ்சாப் முதியவர் மரணம் தொடர்பான வழக்கில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து முதியவர் மரணத்துக்கு காரணமானவர் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது.
பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதால் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
என்னை மன்னித்து விடுங்கள்... நான் செய்தது மிகப்பெரிய தவறு... தொண்டர்களிடம் கெஞ்சிய சித்து
குர்னாம் சிங்
1988ம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக 65 வயதான குர்னாம் சிங்குக்கும் அப்போது கிரிக்கெட் வீரராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் குர்னாம் சிங்கை சித்து தாக்கினார். இதில் காயம் அடைந்த குர்னாம் சிங், அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் இருக்கும்போதே குர்னாம் சிங் இறந்துபோனார். இதையடுத்து, நவ்ஜோத் சிங் சித்து மீது போலீசார், நோக்கம் இல்லாத கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது.
வழக்கு
பாட்டியாலா கீழ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. சித்து தாக்கி முதியவர் சாகவில்லை என்றும், மாரடைப்பால் தான் முதியவர் இறந்தார் என்று மருத்துவ அறிக்கை சமர்பிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில், சித்துவை விடுதலை செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். இதை எதிர்த்து குர்னாம் சிங் குடும்பத்தார் பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். சித்துவுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது உயர்நீதிமன்றம்.
உச்சநீதிமன்றம்
இந்த தீர்ப்பை எதிர்த்து சித்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 2018ல், சித்துவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து, அபராத தொகையையும் 1,000 ரூபாயாக குறைத்தது. இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி, குர்னாம் சிங்கின் குடும்பத்தினர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், கவுல் அடங்கிய அமர்வு முன் நேற்று நடந்தது.
நோட்டீஸ்
நவ்ஜோதுக்கு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது பற்றி, இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 32 வருஷ பழைய வழக்கு நவ்ஜோத் சிங்குக்கு மீண்டும் தலைவலியாக மாறி வருகிறது. ஏற்கெனவே பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படாதது குறித்து வருத்தத்தில் இருந்தார். மேலும் தேர்தலுக்கு முன் அவருடைய சகோதரி, தங்கள் தாயை கவனித்து கொள்ளாமல் சித்து சாகடித்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.