அனல் பறக்கும் அதிமுக.. அப்போ இரட்டை இலை யாருக்குமே இல்லையா? முடங்கும் சின்னம்? எடப்பாடியால் அம்பலம்
டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதில் தலைமை தேர்தல் ஆணையம் உறுதியாக இருப்பதையே உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கோஷ்டி தாக்கல் செய்த முறையீடு வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எப்படியும் போட்டியிடுவது என்பதில் அதிமுக இபிஎஸ் கோஷ்டி உறுதியாக உள்ளது. இபிஎஸ் கோஷ்டி வேட்பாளரை இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால் 106 பேர் கொண்ட பிரம்மாண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது. அதிமுகவின் ஓபிஎஸ் அணியும் வேட்பாளரை இறக்குவது தொடர்பாக நல்ல நாள், நேரம் பார்த்து கொண்டிருக்கிறது.
அதிமுக இபிஎஸ் அணியின் சார்பில் கேவி ராமலிங்கம் அல்லது தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இபிஎஸ் அணி வேட்பாளரை அறிவிக்காமல் தாமதித்து வருகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் அணி ஒரு முறையீடு செய்துள்ளது. அதில், தேர்தல் ஆணையமானது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தாம் என்பதை ஏற்க மறுக்கிறது. வேட்பாளரின் விண்ணப்பத்தில் தாம் இடைக்கால பொதுச்செயலாளர் என கையெழுத்திட்டால் அதை ஏற்க முடியாது என்கிறது. இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதுதான் இபிஎஸ் தாக்கல் செய்திருக்கும் முறையீடு. மேலும் தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதும் இபிஎஸ் மனுவின் மற்றொரு முக்கிய கோரிக்கை.
அதாவது அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி வேட்பாளரை நிறுத்தினால் ஓபிஎஸ் கோஷ்டியும் வேட்பாளரை நிறுத்தும். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி, வேட்பு மனுவில் கையெழுத்திடுவார்; அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திடுவார். இதனடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை இருவருமே உரிமை கோருவர்.
ஈரோடு கிழக்கு அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக.. மாஃபா பாண்டியராஜன்!
ஏற்கனவே யார் உண்மையான அதிமுக என்பதை தீர்மானிக்கக் கூடிய, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி முதல் வாரத்தில்தான் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தாக வேண்டும். இதனால் உச்சநீதிமன்றத்தில் இன்று இபிஎஸ் தரப்பு முறையிட்டது. ஆனால் வரும் திங்கள்கிழமையன்று முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தற்போது இபிஎஸ் தரப்பு, உச்சநீதிமன்றத்தை அணுகியிருப்பதன் மூலம் ஒரு விவகாரம் தெளிவாகி இருக்கிறது. அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் இருதரப்பையும் தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இருதரப்பும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை சிலை சின்னம் கோரினாலோ அல்லது ஒருதரப்பு உரிமை கோரினாலோ அதிமுக தேர்தல் சின்னமாகிய இரட்டை இலையை தேர்தல் ஆணையம் யாருக்கும் தராது; இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைக்கும்; உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் வெல்லும் கோஷ்டிக்கு இரட்டை இலை சின்னம் தரும் என்பதுதான் இப்போதைய நிலைமை.
அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அக்கட்சி ஜானகி, ஜெயலலிதா தலைமையில் இரு அணிகளாக உடைந்தது. அப்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதேபோல் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் இரட்டை சிலை சின்னம் முடக்கப்பட்டது. ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கொடுக்கப்படவில்ல. தற்போது மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.