விவசாயிகள் போராட்டம்.. கோ பேக் மோடி ட்ரெண்டிங் இடையே.. பஞ்சாப் செல்லும் பிரதமர் மோடி!
டெல்லி: பலத்த எதிர்ப்புகளுக்கிடையே பஞ்சாப் சென்று சட்டசபைத் தேர்தலுக்காக பிரசாரம் செய்யவிருக்கிறார் பிரதமர் மோடி.
விவசாயிகள் போராட்டம், கோ பேக் மோடி ட்ரெண்டிங், ஏற்கெனவே பாதியில் முடிந்த பயணம் இதையெல்லாம் தாண்டி மீண்டும் பஞ்சாப் செல்லவிருக்கிறார் பிரதமர் மோடி.
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. விவசாயிகள் போராட்டத்துக்குப் பிறகு பஞ்சாப் தேர்தல் பரபரப்பாகியுள்ளது.
பாடகர் வேல்முருகனுக்கு கிராமிய இசை கலாநிதி பட்டம் - தருமபுரம் ஆதினத்தின் ஆஸ்தான பாடகராக நியமனம்
பிரதமர் மோடி
பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி, வரும் 14ம் தேதி பஞ்சாப் செல்லவிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மாநில பாஜக செய்து வருகிறது. பிரதமர் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக பிரதமரின் பாதுகாப்பு குழு பஞ்சாப் விரைந்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மற்றும் பதன்கோட் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் பயணத்தில் மீண்டும் எந்த தடங்களும் ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
ரத்தான பயணம்
கடந்த மாதம் பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூரில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பஞ்சாப் சென்றார் பிரதமர். இந்நிலையில் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் திடீரென சாலை மார்கமாக பயணிக்க திட்டமிடப்பட்டது. பெரோஸ்பூர் மாவட்டத்திற்கு மோடி சாலை வழியாக காரில் சென்றபோது, விவசாயிகள் மறியல் போராட்டத்தால், அவரது பயணம் தடைப்பட்டது. 20 நிமிடங்கள் வரை மேம்பாலத்திலேயே பிரதமர் காத்திருக்க நேரிட்டது.
பாதுகாப்பு குளறுபடி
பிரதமரின் வருகை, திட்டம் குறித்து பஞ்சாப் அரசிடம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. பஞ்சாப் பாதுகாப்பு குளறுபடியால், பிரதமர் உயிருக்கு ஆபத்து என்று புகார்கள் வந்தன. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
காலி சேர்
இதற்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் பதிலளிக்கையில், ''சிலர் சாலையில் மறியல் செய்தனர். அந்த வழியாக பிரதமர் வருவது அவர்களுக்குத் தெரியாது. ஒரு கி.மீ தூரத்திலிருந்தே பிரதமரின் பாதுகாப்புப் படைக்கு போராட்டம் தெரிந்தது. அதனால் யூடர்ன் எடுத்தார்கள். இதில் அச்சுறுத்தல் எங்கே இருக்கிறது" என்று தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் செல்லவிருந்த நிகழ்ச்சிக்கு மக்கள் யாரும் வராததால், வெறும் காலி சேர்கள் மட்டுமே இருந்ததாக சிலர் அதை புகைப்படம் எடுத்து பதிவிட்டனர். இதனால் தான் பிரதமர் திரும்பிப் போனதாகவும் தெரிவித்தனர்.
கோ பேக் மோடி
விவசாய சட்டத்தை ரத்து செய்ய சொல்லி, டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 700க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை என, கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி மேற்கொண்ட டிஜிட்டல் பிராசாரத்தின் போது 'கோ பேக் மோடி' என்று ட்வீட் செய்து தேசிய அளவில் ட்ரெண்ட் செய்தனர் பஞ்சாப் விவசாயிகள். இந்நிலையில் தான் பிரதமர் மோடி, தேர்தல் பிரசாரத்துகாக பஞ்சாப் செல்லவிருக்கிறார்.