போக்சோ கேஸ்களில் சர்ச்சை தீர்ப்பு.. புஷ்பா கணேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரை நிராகரிப்பு
டெல்லி: போக்சோ சட்டம் தொடர்பாகப் பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கிய மும்பை ஐகோர்ட் நீதிபதி புஷ்பா கணேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் 2ஆவது முறையாக நிராகரித்துள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக உள்ளவர் புஷ்பா கணேடிவாலா. இவர் கடந்த 2007இல் மாவட்ட நீதிபதியாகத் தனது பயணத்தைத் தொடங்கினார்.
ஆஸ்திரேலியாவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஜனவரி முதல் தடுப்பூசி.. அரசு அறிவிப்பு!
கடந்த 2019 பிப்ரவரி 8ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் இவர் நியமிக்கப்பட்டார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்துடன் இவர் மீண்டும் மாவட்ட நீதிபதி பதவிக்குத் திரும்ப உள்ளார்.
உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
பொதுவாக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுபவர் மீண்டும் மாவட்ட நீதிமன்றத்திற்குத் திரும்ப அனுப்பப்படுவது என்பது மிக மிக அரிதாகவே நடக்கும் நிகழ்வு. இருப்பினும், போக்சோ வழக்குகளில் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கியதால் புஷ்பா கணேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் போக்சோ வழக்கு ஒன்றில் இவர் வழங்கிய தீர்ப்பு நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியது.
சர்ச்சை தீர்ப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 வயது சிறுமியின் உடலை சீண்டியதாக இளைஞர் ஒருவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த புஷ்பா கணேடிவாலா, "குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைக்கு மேலே உடலைச் சீண்டினால், அது போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது. உடலுறவு கொள்வதைத் தவிர, தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே போக்சோ சட்டத்தின் கீழ் வரும்" என்று தீர்பு அளித்துப் பரபரப்பைக் கிளப்பினார்.
நிராகரிப்பு
அதேபோல அதற்கு முன்பும் மற்றொரு வழக்கில், சிறுமியின் கையைப் பிடித்திருப்பதும், பேன்ட் 'ஜிப்' திறந்திருப்பதும் போக்சோ சட்டத்தில் குற்றமாகாது என கூறியிருந்தார். இப்படி பெண் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி வந்தார். இந்தச் சூழலில் புஷ்பா கணேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்துள்ளது.
என்ன காரணம்
போக்சோ போன்ற முக்கிய வழக்குகளைக் கையாள்வது தொடர்பாக அவருக்குக் கூடுதலாகப் பயிற்சி தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நீதிபதி புஷ்பா கணேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்துள்ளது இது 2ஆவது முறையாகும். ஏற்கனவே ஜனவரி மாதமும் புஷ்பா கணேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்திருந்தது.