"வேறு யாரும் உதவவில்லை.. இந்திய மட்டுமே உதவுகிறது!" இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நெகிழ்ச்சி
டெல்லி: இலங்கை பொருளாதாரம் மிக மோசமாக இருக்கும் சூழலில், நிலைமையை மேம்படுத்த அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இலங்கை நாட்டில் மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
மக்கள் போராட்டம் காரணமாக ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராமலிங்க பிரதிஷ்டை விழா.. ராவண வதம்..இலங்கை மன்னனாக விபீஷணருக்கு பட்டாபிஷேகம்
இலங்கை பிரதமர்
இலங்கை நாட்டிற்கு உதவிகளைப் பெற ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலகின் பிற நாடுகளிடம் இருந்தும் உதவிகளைப் பெற முயன்று வருகிறார். இருப்பினும், உலக நாடுகள் இலங்கைக்குப் பெரியளவில் உதவவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் இலங்கை நாட்டிற்கு உதவவில்லை என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க
இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, "சர்வதேச நிதியத்தின் ஒரு குழுவை உடனடியாக இலங்கைக்கு அனுப்பும்படி வலியுறுத்தி உள்ளேன். இது வெற்றிகரமாக நடந்து முடிந்தால் நமக்கு 6 பில்லியன் டாலர்கள் கிடைக்கும். இது அடுத்த ஆறு மாதங்களுக்கு நிலைமையைச் சமாளிக்க உதவும். இலங்கை மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். போராட்டம் நடத்துங்கள்.. ஆனால் மின்வெட்டு ஏற்படக் காரணமாக இருந்துவிடாதீர்கள்.
இந்தியா மட்டுமே உதவுகிறது
நீங்கள் அப்படிச் செய்யும் போது, இந்தியாவிடம் உதவி கேட்கும்படி என்னிடம் கேட்காதீர்கள். எரிபொருளுக்கும் நிலக்கரிக்கும் எந்த நாடும் பணம் தருவதில்லை. இந்தியா மட்டுமே நமக்கு உதவுகிறது. நமக்கு இந்தியா கொடுக்கும் கடன் உதவி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. அதை நீட்டிப்பது குறித்துப் பேசி வருகிறோம். இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்க முடியாது. இந்தியாவில் சிலர் எங்களுக்கு ஏன் உதவி செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பத் தொடங்கி உள்ளனர்" என்றார்.
மின் துறை
இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டின் மின் துறை தொழிலாளர்கள் வரும் புதன்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இது இலங்கை அரசுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மின் பற்றாக்குறை அங்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த போராட்டம் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது,
விவசாயம்
இலங்கை ரசாயன உரங்களுக்குத் தடை விதித்ததும், இந்த நிலை ஏற்பட முக்கிய காரணமாகக் கருதிப்படுகிறது. இந்தச் சூழலில் யூரியாவை கொள்முதல் செய்ய இலங்கை 55 மில்லியன் டலர் கடனை இந்தியாவிடம் கோரியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா இதுவரை முடிவையும் எடுக்கவில்லை.