'கடன் தவணை அவகாசம்'.. 'நாங்கள் பொருளாதார நிபுணர்கள் அல்ல'.. தலையிட முடியாது.. உச்ச நீதிமன்றம்
டெல்லி: கொரோனா 2வது அலையை காரணம் காட்டி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் தவணை செலுத்த அவகாசம் வழங்க முடியாது.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை என்றும், தாங்கள் பொருளாதார நிபுணர்களும் கிடையாது,. எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என்றும் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
கொரோனா பரவலின் முதல் அலையின் போது முழு ஊரடங்கு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசு, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களின் தவணையை செலுத்த 6 மாதம் அவகாசம் அளித்தது. அந்த ஆறு மாத காலத்தில் கடன் கட்டாதவர்களின பட்டியல் சிபிலும் சேர்க்கப்படவில்லை.
கடன் தவணை.. மக்களை கட்டாயப்படுத்தினால்.. கடும் நடவடிக்கை.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
ஊரடங்கு
எனவே தற்போது கொரோனா 2வது அலையால் நாடு முழுவதும் அதிக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் அலையைவிட இரண்டாவது அலை பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மோசமான பாதிப்பை பல குடும்பங்களில் ஏற்படுத்தி உள்ளது,.
அவகாசம் இல்லை
இதனால் மீண்டும் கடன் தவணை செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இதுவரை மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
அவகாசம் கோரி வழக்கு
இந்நிலையில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், "கொரோனா 2வது அலை பாதிப்பால் இந்தியாவில் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர். பண புழக்கமும் இல்லை. எனவே வங்கி கடன் தவணை செலுத்துவதற்கு புதிய கால அவகாசத்தை மக்களுக்க வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்,
உத்தரவு பிறப்பிக்க முடியாது
இந்த மனுவை நீதிபதிகள் அசோக் பூஷன், எம்.ஆர்.ஷா அமர்வு நேற்று விசாரித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கொரோனா 2வது அலையை காரணம் காட்டி வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு புதிய கால அவகாசம் வழங்க உத்தரவிட முடியாது. இந்த விவகாரத்தில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. இதில் தலையிட நாங்கள் பொருளாதார நிபுணர்கள் இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்றார்.