எல்லையில் பதட்டம்...j20 போர் விமானங்களுடன் சீனா...பதிலடிக்கு இந்தியா தயார்!!
ஸ்ரீநகர்: எல்லையில் லடாக் எதிரே தனது எல்லைக்குள் சீனா j20 எனப்படும் போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. லடாக் அருகே இருக்கும் இடங்களில் இந்த விமானங்களை நிறுத்தி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்தியில் தெரிய வந்துள்ளது. நேற்று முன்தினம் பாங்காங் டிசோ பகுதியில் நுழைய முயற்சிப்பதற்கு முன்பாக இந்த விமானங்களை சீனா நிறுத்தியுள்ளது.
Recommended Video
லடாக் பகுதிக்கு எதிரே இருக்கும் ஹோடன், கர் குன்சா ஆகிய இடங்களில் இந்த போர் விமானங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சீனாவும் j20 சண்டை விமானங்களை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்திய விமானப்படையில் ஐந்து ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டொரு மாதங்களில் மேலும் மூன்று முதல் நான்கு ரபேல் விமானங்கள் சேர்க்கப்படலாம் என்று இந்திய விமானப்படை ஏற்கனவே தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு ரபேல் விமானங்கள் வந்து சேருவதற்கு முன்பு இருந்தே கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் கல்வான் பகுதியில் இந்திய ராணுவத்தினர் 20 பேரை சீன ராணுவம் கொடூரமாக கொன்றது. இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து தனது படைகளை வாபஸ் வாங்குவதற்கு சீனா முதலில் ஒப்புக் கொண்டது. ஆனால், மீண்டும் பாங்காங் டிசோ பகுதியில் தனது ராணுவ பலத்தை காட்டுவதற்கு என்று சீனா ராணுவ தளவாடங்களை குவித்து இந்தியாவுக்கு சவாலாக இருந்து வருகிறது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 2017ஆம் ஆண்டில் டோக்லாம் பகுதியில் மோதல் ஏற்பட்டது. அப்போது இருந்தே திபெத் பகுதிக்கு உட்பட்ட நகரி குன்சா பகுதியில் சீனா தனது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது. இந்த விமானப்படை தளம் பாங்காங் டிசோ பகுதியில் இருந்து வெறும் 200 கி. மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. எளிதாக இங்கிருந்து தனது படைகளை இந்தியாவுக்கு எதிராக திருப்பலாம் என்பதால் இங்கும் தனது படை பலத்தை சீனா சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது.
எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும்: சீனா
இந்தப் பகுதிகள் மட்டுமின்றி காஷ்கர், ஹாப்பிங், டோங்கா சோங், லின்சி, பன்கட் விமானப்பட தளங்களையும் இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இதையடுத்துதான் இந்தியாவும் எல்லையில் படை பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுகோய் 30MKI, மிக 29, மிராஜ் 2000 ஆகிய போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. சமீபத்தில் ரபேல் விமானத்தையும் இணைத்துக் கொண்டுள்ளது.