தொங்கு சட்டசபை: ஜம்மு காஷ்மீரில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும்?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தல்கள் வெளியாகிவிட்ட நிலையில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதில் குழப்பமான நிலையே நீடித்து வருகிறது.
87 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர சட்டசபை தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) 28 இடங்களைக் கைப்பற்றியது. பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
தேசிய மாநாட்டுக் கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 44. ஆனால் எந்த ஒரு கட்சியும் 44 இடங்களைப் பெறவில்லை.
இதனால் ஜம்மு காஷ்மீரத்தில் எந்த கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது?
பி.டி.பி. பாஜக கூட்டணி அமையுமா?
இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் மொத்தம் 53 இடங்கள் வருகிறது. அப்படி இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்தால் பாஜக துணை முதல்வர் பதவியைப் பெற வாய்ப்பு உள்ளது. முக்கிய அமைச்சர் பதவிகளையும் பாஜக பெறக் கூடும்.
பி.டி.பி- காங்கிரஸ்
28 இடங்களைப் பெற்ற பி.டி.பி. ஆட்சி அமைக்க ஆதரவு தர தயார் என்று 12 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் அறிவித்துள்ளது. அப்படியே காங்கிரஸ் ஆதரவு அளித்தாலும் கூட மொத்தம் 40 இடங்கள்தான் வருகிறது. ஆட்சி அமைக்க மேலும் 4 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது.
பா.ஜ.க. - என்.சி
25 இடங்களைக் கைப்பற்றிய பாரதிய ஜனதாவும் 15 இடங்களைக் கைப்பற்றிய என்.சி.யும் கூட்டணி வைக்கலாம். இதை பாஜகவினரும் விரும்புகின்றனர். அதே நேரத்தில் பாஜக முதல்வர் பதவியை வைத்துக் கொள்ல வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால் என்.சி. இதனை ஏற்குமா என்பதில் இழுபறியான நிலை. பாஜகவுடன் 99% கூட்டணி இல்லை என்று கூறிய என்.சி. தலைவர் ஒமர் அப்துல்லா, வாஜ்பாய்க்கு பாரத ரத்னா தருவதற்கு ஆதரவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்தாலும் மேலும் 4 இடங்கள் தேவை என்கிற நிலையில் பிரிவினைவாத தலைவர் சஜ்ஜன் லோனின் கட்சி 2 இடங்களில் வென்றுள்ளது. சுயேட்சைகளையும் இணைத்துக் கொண்டு பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது.
வெளியில் இருந்து ஆதரவு?
அதே நேரத்தில் பி.டி.பி. மைனாரிட்டி ஆட்சி அமைக்க பாஜக வெளியில் இருந்து ஆதரவு தரவும் வாய்ப்பிருக்கிறது.