சோம்நாத் கோவிலுக்கு 100 கிலோ தங்கத்தை காணிக்கையாக அளித்த மும்பை வைரவியாபாரி... ரூ. 30 கோடி மதிப்பு!
அகமதாபாத்: மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி குடும்பத்தினர் குஜராத்தின் புகழ்பெற்ற சோம்நாத் சிவன் கோவிலுக்கு ரூ. 30 கோடி மதிப்புள்ள 100 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
குஜராத்தின் சோம்நாத் சிவன் கோவில் புகழ்பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்று. வரலாற்று காலங்களில் பல முறை படையெடுப்புக்குள்ளானது. தற்போதைய சோம்நாத் கோவிலானது 1947ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டு ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத்தால் திறந்து வைக்கப்பட்டது. இந்துக்களின் 12 புனித சிவாலயங்களில் இதுவும் ஒன்று.
இந்தக் கோவிலின் டிரஸ்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அத்வானி, கேசுபாய் படேல் என மூத்த பாரதிய ஜனதா தலைவர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.
வைர வியாபாரி...
இந்நிலையில் இந்தக் கோவிலுக்கு கடந்த ஞாயிறன்று மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான திலீப்பாய் என்பவரின் குடும்பத்தார் 40 கிலோ மதிப்புள்ள தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
தங்கத்தட்டு...
ஏற்கனவே, திலீப்பின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கோவிலுக்கு 60 கிலோ தங்கம் வரை காணிக்கையாக அளித்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 கிலோ மதிப்புள்ள தங்கத் தட்டு ஒன்றை அவர்கள் அளித்தனர்.
100 கிலோ தங்கம் காணிக்கை...
தற்போது அவர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ள 40 கிலோ தங்கத்தையும் சேர்த்து, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அவர்கள் 100 கிலோ தங்கத்தை சோம்நாத் கோவிலுக்கு வழங்கியுள்ளதாக அக்கோவில் நிர்வாகத்தார் தெரிவித்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 30 கோடி ஆகும்.
கோவில் நிர்வாகம்...
திலீப் குடும்பத்தாரிடமிருந்து பெறப்பட்ட தங்கத்தை கோவிலின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காரணங்களுக்கு பயன்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.