கண்ணிய ஆடை கருத்து: மன்னிப்பு கோரினார் தெலுங்கு தேசம் எம்.பி.!
டெல்லி: பெண்கள் கண்ணியமாக ஆடை அணிய வேண்டும் என விமர்சித்த தெலுங்கு தேச கட்சி எம்.பி தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை விவாதம் நடந்தது.
அப்போது, தெலுங்குதேசம் எம்.பி. முரளி மோகன் மகந்தி விவாதத்தில் கலந்து கொண்டு பேசும்போது, "நமது இந்திய கலாச்சாரத்தை சீர்தூக்கும் வகையில், என் சகோதரிகள், மகள்கள் அனைத்து மகளிரும் கண்ணியமாக ஆடை அணிய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இது பாரத மாதாவுக்குச் செலுத்தும் அஞ்சலி ஆகும்" என கூறியிருந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சுப்ரியா சூலே(தேசியவாத காங்கிரஸ் கட்சி), குமாரி சுஷ்மிதா தேவ் (காங்கிரஸ்) உள்ளிட்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவை குறிப்பில் இருந்து எம்.பி முரளி மோகன் மகந்தியின் கருத்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் அவையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனையடுத்து, முரளி மகந்தி தனது கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். தனது கருத்துக்காக மன்னிப்பும் கோரினார்.
நேற்று ராஜ்யசபாவில் இந்த விவகாரத்தை உறுப்பினர்கள் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உறுப்பினர் விப்லோவ் தாகூர் கூறுகையில், தெலுங்கு தேச எம்.பி.யின் கருத்து மனநிலையை பிரதிபலிக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதனால், சபைத் தலைவர் ஹமீது அன்சாரி 15 நிமிடங்கள் சபையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், தனது கருத்துக்காக முரளி மோகன் மகந்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ''பெண்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும் என நான் கூறிய கருத்து, பெண்களுக்கு விரோதமான அர்த்தத்தில் அல்ல" என்று கூறினார்.