விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி?.. நிகழ்ச்சியை ஒன்றாக தொகுத்து வழங்கும் சானியா-சோயிப் ஜோடி
இஸ்லாமாபாத்: சானியா மிர்சா - சோயிப் மாலிக் நட்சத்திர ஜோடி விரைவில் விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், பாகிஸ்தானில் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி ஒன்றை இணைந்து தொகுத்து வழங்க இருப்பதாக இந்த ஜோடி அறிவித்துள்ளது.
நட்சத்திர தம்பதிகளான சானியா - சோயிப் மாலிக் ஜோடி விரைவில் பிரியப்போவதாக கடந்த சில நாட்களவே வதந்திகள் பரவி வருகின்றன.
இதற்கு ஏற்றார் போல சானியாவும் தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டு வந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மிர்சா - மாலிக் ஷோ என்ற பெயரில் நிகழ்ச்சி
இந்த நிலையில், பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றில் சானியா மிர்சாவும்- சோயிப் மாலிக்கும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உருதுபிளிக்ஸ் (Urduflix) என்ற சேனலின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவு போடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் எனத்தெரிகிறது. மிர்சா - மாலிக் ஷோ என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனத்தெரிகிறது.
இருவரின் ரசிகர்களும் உற்சாகம்
இந்த ஷோவின் புரோமஷன் பதிவில் சோயிப் மாலிக் மீது சாய்ந்த படி சானியா மிர்சா நிற்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இந்த பதிவை பார்த்ததும் இருவரின் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். விவாகரத்து வதந்திகளுக்கு எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் இருவருமே மவுனம் காத்து வந்த நிலையில், நிகழ்ச்சியை ஒன்றாக பங்கேற்பதாக வெளியாகி இருக்கும் தகவல் இருவரது ரசிகர்களுக்குமே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
அந்த வகையில், ''எனது மனம் முழுமையும் மகிழ்ச்சியில் நிறைந்து உள்ளது'' என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். உருது பிளிக்ஸ் சேனலின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே கமெண்டுகளை இருவரது ரசிகர்களும் குவித்து வருகின்றனர். ரசிகர்கள் பலரும் விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த பதிவு அமைந்து இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
வெளிப்படையாக அறிவிக்கவில்லை
எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட செய்தியில், இருவரும் இணைந்து சில நிகழ்ச்சிகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அதன் காரணமாகவே விவாகரத்து குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தது.
உண்மையாக இருக்கக் கூடாது
இந்த செய்திகள் வெளியான சில தினங்களில் சோயிப்- சானியா ஜோடி ஒன்றாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது பற்றிய அறிவிப்பும் வந்து இருக்கிறது. எனவே இந்த இரண்டிற்கும் முடிச்சு போடும் சில ரசிகர்கள், விவாகரத்து தகவல் உண்மையாக இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டு இருக்கின்றனர்.