ஜாதகம் சரியில்ல.. 5 ஆண்டாக காதலித்து கழற்றிவிட்ட விஏஓ! திருமணத்தை தடுக்க இழிசெயல் -கைது செய்த போலீஸ்
காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் படிக்க வந்த பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்த விஏஓ ஜாதகம் சரியில்லை என்று கூறி திருமணம் செய்ய மறுத்த நிலையில், அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமான ஆணுக்கு இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை அனுப்பிய நிலையில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் வல்லக்கோட்டை என்ற ஊரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரமங்கலம் பகுதியில் நடைபெற்று வந்த டிஎன்பிஎஸ்சி வகுப்பில் படித்துவந்தபோது உள்ளாவூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி (வயது 26) என்ற பெண்ணை சந்தித்து பழகி உள்ளார்.
காருக்கு அடியே கதறிய பெண்.. தெரிந்தும் 12 கிமீ ஓட்டி சென்ற குற்றவாளிகள்! அரண்டுபோன டெல்லி போலீஸ்
ஜாதகத்தை காட்டிய விஏஓ
நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியது. ஐந்து வருடமாக இருவரும் காதலித்து வந்த நிலையில் சிவரஞ்சனி தன்னை திருமணம் செய்து கொள்ள ராஜேஷை வலியுறுத்தினார். ராஜேஷ் பிடிவாதமாக சிவரஞ்சினியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். ஜாதக பொருத்தம் சரியில்லை எனக்கூறி இந்த திருமணம் நடைபெறாது என்று சொல்லி அவர் நழுவ முயற்சித்தார்.
வேறொரு மணமகனை
இதனால் அதிர்ச்சியடைந்த சிவரஞ்சனி வல்லக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று ராஜேஷை கட்டிப்பிடித்து அழுது உள்ளார். சிவரஞ்சனி தன்னை கட்டிப்பிடித்து அழுததை விஏஓ ராஜேஷ் மறைமுகமாக புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டார். இந்த நிலையில் சகஜ நிலைக்கு திரும்பிய சிவரஞ்சனிக்கு வேறொரு மணமகனை அவரது வீட்டார் பார்த்தனர்.
புகைப்படத்தை அனுப்பிய விஏஓ
திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரை திருமணம் செய்ய சிவரஞ்சனி சம்மதம் தெரிவித்து நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இதனை அறிந்த ராஜேஷ் ஜானகிராமனின் செல்பேசி எண்ணை பெற்று, சிவரஞ்சனி தன்னை கட்டிப்பிடித்து அழுத புகைப்படத்தை அனுப்பி வைத்து இருக்கிறார்.
தவறான வாய்ஸ் மெசேஜ்
"இந்த பெண் என்னை காதலித்தார். ஆனால் அவர் சரியில்லை." என வாய்ஸ் மெசேஜ் ஒன்றை ஜானகிராமனுக்கு அனுப்பி வைத்தார். ஜானகிராமன் தனது உறவினர்கள் 20 பேரை அழைத்து வந்து சிவரஞ்சனி வீட்டிற்கு சென்று புகைப்படத்தை காண்பித்து அவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறி தாங்கள் செலவு செய்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
நின்றுபோன திருமணம்
அத்துடன் இந்த திருமணத்தை நடைபெறாது எனக் கூறி சிவரஞ்சனியின் குடும்பத்தினர் உடனான திருமண உறவை ஜானகிராமன் குடும்பத்தினர் துண்டித்தனர். திருமணம் தடைபட்டதால் அதிர்ச்சியடைந்த சிவரஞ்சனியின் குடும்பத்தினர், புகைப்படத்தை அனுப்பியது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைமில் புகார் அளித்தனர்.
விஏஓ ராஜேஷ் கைது
சாலவாக்கம் காவல் நிலையத்தில் இந்த புகார் பெறப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதில் ராஜேஷ் புகைப்படம் அனுப்பியது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் ராஜேஷை சாலவாக்கம் காவல் துறையினர் கைது செய்து உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சிறையில் அடைப்பு
ராஜேஷை நிதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து அவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.