டாஸ்மாக் பணியாளருக்கு பாராட்டு சான்று கொடுத்தது ஏன்?.. நீண்ட விளக்கம் அளித்த கரூர் ஆட்சியர்

டாஸ்மாக் பணியாளருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது ஏன் என்பது குறித்து கரூர் ஆட்சியர் விளக்கியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கரூர்: போலி மதுபான விற்பனையை தடுப்பது, அரசு விதிகளை பின்பற்றுவது போன்றவை டாஸ்மாக் பணியாளர்களின் ஒரு பகுதியாகும். இந்த பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காகவே அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

74 ஆவது குடியரசுத் தினவிழா நாடு முழுவதும் கடந்த 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்களில் சிறப்பாக செயல்பட்டவர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிப்பது வழக்கம்.

அந்த வகையில் மாநில வளர்ச்சிக்காக பல்வேறு அரசு துறையில் அயராது உழைத்து பணியாற்றிய ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக குடியரசு தின விழாவில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கரூர் விளையாட்டு மைதானம்

கரூர் விளையாட்டு மைதானம்

அதன்படி கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று முன் தினம் குடியரசு தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். மேலும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பல்வேறு துறைகள் சார்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் கேடயமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் மது விற்பனை

கரூர் மாவட்டத்தில் மது விற்பனை

இதில் கரூர் மாவட்டத்தில் மது விற்பனையில் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சண்முக வடிவேல், மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், ஆறுமுகம், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழை ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார்.

சமூகவலைதளத்தில் பாராட்டுச் சான்றிதழ்

சமூகவலைதளத்தில் பாராட்டுச் சான்றிதழ்

இந்த பாராட்டு சான்றிதழ் சமூகவலைதளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது. டாஸ்மாக்கில் அதிக வருவாய் ஈட்டி கொடுத்ததற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியதற்கு கிண்டல் செய்து மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சண்முக வடிவேல், மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், ஆறுமுகம், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் திரும்ப பெறப்பட்டது.

கரூர் மாவட்ட நிர்வாகம்

கரூர் மாவட்ட நிர்வாகம்

இந்த நிலையில் திரும்ப பெறப்பட்ட சான்றிதழில் இருந்த டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்காக என்ற வார்த்தையை மட்டும் திருத்தம் செய்தனர். அதில் டாஸ்மாக் நிர்வாகத்தில் சிறந்தப் பணிக்கான பாராட்டுச் சான்றிதழ் என மாற்றி அந்த பாராட்டுச் சான்றிதழ் 4 பேருக்கு திரும்பவும் கரூர் மாவட்ட நிர்வாகம் வழங்கியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று சிறப்பாக பணியாற்றிய அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கும் நிகழ்வு நாடு முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெறும் ஒன்றாகும்.

தலைமை அலுவலர்

தலைமை அலுவலர்

இந்த விருதிற்காக ஒவ்வொரு துறையின் தலைமை அலுவலரிடம் பரிந்துரை பட்டியல் காரணத்துடன் பெறப்பட்டு அதிலிருந்து இறுதி பட்டியல் தேர்வு செய்யப்படுகிறது. இந்தாண்டு 74வது குடியரசு தினத்தன்று கரூர் மாவட்டத்தில் 387 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பொதுவாக இவ்விருதுகள் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கடைநிலை அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பபட்டு வருகிறது. இந்த அங்கீகாரம் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர், கிராம உதவியாளர், தூய்மை காவலர், மேல்நிலை தொட்டி பராமரிப்பாளர், சத்துணவு சமையலர், அங்கன்வாடி உதவியாளர், கால்நடை உதவியாளர், மின்சார வாரிய லைன்மேன், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என பல்வேறு தரப்பினருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

தன்னார்வ அமைப்புகள்

தன்னார்வ அமைப்புகள்

மேலும், தன்னார்வ அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும், சமுதாயத்திற்கு தொண்டாற்றிய சிறந்த நபர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. அத்துறையை சார்ந்த பணியாளர்களுக்கு விருது வழங்குவது இது முதல் முறை அல்ல. பல ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளது. மேலும், பாராட்டு சான்றிதழில் இடம்பெற்ற சொற்கள் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட நடையிலேயே தயாரிக்கப்பட்டு, பின்னர் இறுதியாக இந்தாண்டு வழங்கப்பட்ட சான்றிதழ் அவர்கள் விரிவான பணியை பாராட்டும் நடையில் இடம்பெற்றது. போலி மதுபான விற்பனையை தடுப்பது, கலப்பட மதுபான விற்பனையை தடுப்பது, அரசு விதிகளைப் பின்பற்றுவது போன்றவை அவர்களுடைய பணிகளின் ஒரு பகுதியாகும்.

டாஸ்மாக் பணியாளர்கள்

டாஸ்மாக் பணியாளர்கள்

இந்த பணிகளை சிறப்பாக மேற்கொள்வோரை பாராட்டுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதே உண்மை. இந்நிலையில், சான்று பெற்ற டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தாங்கள் இழிவான தொழில் செய்வது போன்று எழுந்த விமர்சனங்களால் மிகுந்த மன வேதனையில் உள்ளதாக தெரிகிறது. இதை அனைவரும் கருத்தில் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். வரும் காலங்ளில் இது போன்ற நுட்பமான மற்றும் உணர்வு பூர்வமான விஷயங்கள் கவனமுடன் கையாளப்படும். இறுதியாக டாஸ்மாக் அலுவலர்களுக்கு விருது வழங்குவது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்று மீண்டும் ஒரு முறை இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தனது டுவிட்டர் பக்கத்தில் நீண்ட நெடிய விளக்கம் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+