மகாராஷ்டிரா அரசியல்.. உத்தவ் தாக்கரேவின் ட்விஸ்ட்.. மனைவி மூலம் பேச்சுவார்த்தை..!
மும்பை: சிவசேனா கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏ-க்களின் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகி, பாஜக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று திடீரென சிவசேனா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முக்கிய அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். இவருக்கு ஆதரவாக சிவசேனாவைச் சேர்ந்த 40 எல்எல்ஏ-கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் முதலில் குஜராத் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில், பின்னர் அசாம் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஆட்சியை தக்கவைக்க சிவசேனா கட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பரபரக்கும் மகாராஷ்டிர அரசியல் சதுரங்கம்.. ஏக்நாத் ஷிண்டே முன் இருக்கும் ”5 வாய்ப்புகள்”
சிவசேனா போராட்டம்
இதனிடையே முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏக்னாந்த் ஷிண்டே அணியில் உள்ள எம்எல்ஏ தனஜி சாவந்தின் கட்சி அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மும்பை மற்றும் தானே மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிவசேனா பாலாசாகேப்
இதனிடையே அதிருப்தி எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கும் நடவடிக்கையில் சிவசேனா இறங்கியுள்ளது. முதல் கட்டமாக 16 அதிருப்தி எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக சபாநாயகர் அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு பதிலடியாக, மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா பாலாசாகேப் என்று தனது அணிக்கு பெயர் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தாங்களே உண்மையான சிவசேனா என்றும் பேசியுள்ளார்.
உத்தவ் தாக்கரே பதில்
இதுகுறித்து பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சிவசேனா கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏ-க்கள் யாருடனுடம் கூட்டணி வைக்கலாம். அவர்களின் விருப்பத்தில் தான் தலையிட விரும்பவில்லை. ஆனால் பால் தாக்கரேவின் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதலமைச்சர் மனைவி பேச்சுவார்த்தை
இந்தநிலையில் சிவசேனா கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏ-க்களின் மனைவிகளுடன் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்தினர் மூலம் அதிருப்தி எம்எல்ஏ-க்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சில அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் உத்தவ் தாக்கரே நேரடியாக பேச்சுவார்த்தை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.