மகாராஷ்டிராவை புரட்டிப் போடும் மழை, வெள்ளம்.. 2 நாட்களில் 129 பேர் பலி.. சாலைகள் மாயம்
மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களில் கன மழை காரணமாக 129 பேர் உயிர் இழந்துள்ளனர். இதில் ராய்காட் மாவட்டத்தின் தலாய் கிராமத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 38 பேர் கொல்லப்பட்டதும் அடங்கும்.
இதற்கிடையில், மாநிலத்தில் வெள்ளநீரால் பல சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களில் பெய்த கனமழையால் கடலோரப் பகுதியின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது மற்றும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தலாய் கிராமத்தில் ஒரு இடத்தில் 32 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 4 சகரசுதர்வாடி கிராமத்தில் மற்றொரு இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.
புனேவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான பீமசங்கர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்ததுள்ளது. மும்பை-கோவா நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. கோவாவில் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் ஊருக்குள் புகுந்ததால், நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள. மாற்று வழியில் ரயில்களை இயக்குவதற்கு கூட வழியின்றி பல பகுதிகளில் இருப்பு பாதைகள் சேதமடைந்துள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் பெய்த கனமழை இதுவே என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
மழை வெள்ளத்தால் ஸ்தம்பித்த கொங்கன்...குடியிருப்புகள் முற்றிலும் மூழ்கின - போக்குவரத்து துண்டிப்பு
ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். இறந்தவர்களின் உறவினருக்கு தலா ரூ .2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
மகாராஷ்டிராவின் கடலோர ரத்னகிரி மாவட்டமும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் மி -17 ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்துள்ள மக்களின் உறவினர்களுக்கு மகாராஷ்டிரா அரசு தலா 5 லட்சம் ரூபாய் உதவித் தொகை அறிவித்துள்ளது.