டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.12 கோடி தீபாவளி போனஸ்
சென்னை: தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 20 சதவீத தீபாவளி போனஸில் முதல் தவணையாக 10 சதவீத தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 10 சதவீத போனஸ் தீபாவளிக்கு முன்னர் வழங்கப்படும்.
தமிழகத்தில் 2003ம் ஆண்டு 6 ஆயிரத்து 500 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மேற்பார்வையாளர், விற்பனையாளர், பார் உதவியாளர் என 30 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட்டனர்.
சில ஆண்டுகளாக போனஸ்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையாக ஒன்றரை சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி போனசும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 8.33 சதவீதம் போனசாகவும், 11.67 சதவீதம் ஊக்கத்தொகையும் சேர்த்து மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்குவதாக அரசு அறிவித்தது.
முதற்கட்ட போனஸ்
அதன்படி முதற்கட்டமாக போனசின் 10 சதவீதத் தொகை நேற்று பட்டுவாடா செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள 30 ஆயிரம்டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.12 கோடி போனசாக வழங்கப்பட்டது.
மீதி 10 சதவிகிதம்
மேற்பார்வையாளர், விற்பனையாளர்களுக்கு ரூ.4,200ம், பார் உதவியாளர்களுக்கு ரூ.3,500ம் வழங்கப்பட்டது. மீதமுள்ள 10 சதவீத போனஸ் தொகை தீபாவளிக்கு முன்னர் வழங்கப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகள்
2003-04 -ம் ஆண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடங்கப்பட்டன முதல் நிதியாண்டில் அதன் வருமானம் 3 ஆயிரத்து 639 கோடியாகும். ஆண்டுக்காண்டு இந்த வருமானம் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.
அதிகரிக்கும் வருமானம்
இது 2005-ம் ஆண்டு ரூ.6 ஆயிரத்து 30 கோடியாக விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது இரண்டாண்டுகளில் இருமடங்காக உயர்ந்தது - 2006-ம் ஆண்டு 7 ஆயிரத்து 473 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. 2008-09-ம் ஆண்டில் மதுவிற்பனை 10 ஆயிரத்து 601 கோடியாக அதிகரித்துள்ளது.
ரூ.21000 கோடியை தாண்டியது
2010-ம் ஆண்டில் 12 ஆயிரத்து 498 கோடியாக இருந்த மது விற்பனை 2011-ம் ஆண்டில் 14 ஆயிரத்து 965 கோடியாக உயர்ந்தது. அடுத்த இரண்டாண்டுகளில் அதாவது 2012-13 ஆம் ஆண்டில் மது விற்பனை ரூ. 21 ஆயிரத்து 680 கோடியை எட்டியுள்ளது.
அதிகரிக்கும் குடிமகன்கள்
கடந்த 2003- 04 ஆம் ஆண்டு 156.61 லட்சம் பீர் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை 2013- ஆம் ஆண்டில் 284 .29 லட்சம் பீர் பெட்டிகளாக உயர்ந்துள்ளது. மதுபானங்களின் விற்பனை 156. 61 லட்சம் பெட்டிகளில் இருந்து தற்போது 536.35 லட்சம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.
வருமானமும் அதிகம்.. குடிகாரர்களும் அதிகம்
கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழகத்திற்கு அதிக வருமானம் தரும் நிறுவனமாக டாஸ்மாக் உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதையே இது உணர்த்துகிறது.