பொங்கல்: அவனியாபுரத்தில் சீறிப் பாய்ந்தன ஜல்லிக்கட்டு காளைகள்- மாடுபிடி வீரர்கள் அபாரம்!
பொங்கல் விழாவையொட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது
மதுரை: பொங்கல் விழாவையொட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆவேசத்துடன் அடக்கினர்.
ஜல்லிக்கட்டு புரட்சியின் மூலம் தமிழர் பண்பாட்டு அடையாளம் மீட்கப்பட்டது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறுகின்றன.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் காளைகளைப் பாதுகாக்கும் உறுதிமொழி எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஊர் மரியாதைக்குரிய காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதன் பின்னர் வாடிவாசலில் இருந்து காளைகள் தொடர்ந்து சீறி பாய்ந்தன.
மாடுபிடி வீரர்களும் இந்த காளைகளை ஆவேசத்துடன் அடக்கி பரிசுகளை அள்ளிச் சென்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 400-க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன. அதேபோல் 479 மாடுபிடி வீரர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
போதுமான வெளிச்சம் இல்லாத நிலையில் மாலை 5 மணியுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தன. இதனால் பதிவு செய்திருந்த 500-க்கும் அதிகமான ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் சற்றே ஏமாற்றமடைந்தனர். இன்று காளைகளை அடைக்கும் போது 50-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.