"ஒரு வாட்டி முடிவுபண்ணிட்டா...." - ரஜினி குறித்து கலைஞானம்
ஒருமுறை முடிவு செய்து விட்டால் அதிலிருந்து ரஜினிகாந்த் எப்போதும் பின் வாங்க மாட்டார் என திரையுலக ஜாம்பவான் கலைஞானம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: எதையும் யோசித்து ஒருமுறைக்கு பலமுறை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் பழக்கத்தை கொண்ட ரஜினி, முடிவெடுத்து விட்டால் அதிலிருந்து எப்போதும் பின்வாங்கமாட்டார் என இயக்குநர் கலைஞானம் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திர மண்டபத்தில் தனது ரசிகர்களை ரஜினிகாந்த் தற்போது சந்தித்து வருகிறார். கடந்த மே மாதம் திடீரென ரசிகர்களை சந்தித்த ரஜினி அரசியலுக்கு விரைவில் வருவேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று முதல் இம்மாதம் இறுதி வரை அவரை மீண்டும் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
இந்த சந்திப்பின் போது தன்னை பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்த இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட கலைஞானத்தை மேடையில் அமர வைத்து ரஜினி மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய கலைஞானம், ரஜினி எதையும் அலசி ஆராய்ந்து முடிவெடுப்பார். முடிவெடுத்தப்பின் எப்போதும் அதிலிருந்து அவர் பின்வாங்க மாட்டார்.
ரஜினி வீட்டில் தற்போது சுக்ரன் உச்சத்தில் அமர்ந்திருக்கிறார் அவருக்கு இனிமேல் நல்ல காலம் தான் என்றும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய ரஜினி, தன்னை அறிமுகமப்படுத்தியது பாலசந்தராக இருந்தாலும், என்னை ஹீரோவாக்கியது கலைஞானம் தான். என்னை வளர்த்து விட்டு அழகு பார்த்தவர் கலைஞானம். இதுவரை என்னிடம் அவர் கால்ஷீட்டும், உதவி என்றும் கேட்டு வந்து நின்றதில்லை. இப்போது நான் அடைந்திருக்கும் உயரத்திற்கான முதல் படி அவர் தான், என்றார்.