கோவில்பட்டியில் மைனர் பெண்ணின் திருமணம் தடுத்து நிறுத்தம்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடக்க இருந்த 15 வயது மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும், விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் வெள்ளசாமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணம் நடக்க இருந்தது. இ்ந்நிலையில் திருமணம் நடக்க உள்ள மாணவியின் வயது குறித்து தூத்துக்குடி சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த அமைப்பின் நிர்வாகி காசி ராஜன், சமூக நல விரிவாக்க அலுவலர் சுப்புலெட்சுமி ஆகியோர் கலெக்டர் ரவிகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். கலெக்டர் உத்தரவின் பேரில் கோவில்பட்டி ஏ.எஸ்.பி முரளி ராம்பா, கிழக்கு போலீஸ் எஸ்ஐ சுதாதேவி, மற்றும் போலீசார் மணமகளின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
திருமணம் ஆக போகும் மாணவிக்கு வயது 15 தான் என உறுதி செய்யப்பட்டது. இதனால் 18 வயதுக்கு குறைவாக இருப்பதால் மாணவிக்கு திருமணம் செய்து வைக்க கூடாது என அவரது பெற்றோரிடம் போலீசார் எழுதி கையெழுத்து வாங்கினர்.
இதை மாணவியின் பெற்றோர் ஏற்று கொண்டனர். இதையடுத்து மாணவியின் திருமணம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.